
<h2>வீடு கட்ட ரூ.5 லட்சம் உதவித்தொகை</h2>
<p>தமிழக அரசு கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்களுக்கு சொந்த வீடு வழங்கும் நோக்கில் பல வீட்டு வசதித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள குடிசைகள் மற்றும் ஏழைகளுக்கு 3.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் வீடு கட்டுவதற்கு நிதி உதவியானது வழங்கப்பட்டது. தற்போது புதிதாக தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a>, வெற்றி வீடு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 3.50 லட்சம் ரூபாய் நிதி உதவியானது 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.</p>
<h2>வெற்றி வீடு திட்டம்</h2>
<p>இது தொடர்பாக தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பில், கிராமப்புறங்களில் குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் நோக்கில் வெற்றி வீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தின் கீழ் முதல் ஆண்டிலேயே சுமார் 70,000 வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போதுமான நிதி இல்லாமை, பயனாளிகளைத் தேர்வு செய்வதில் ஏற்படும் சேர்த்தல் மற்றும் நீக்கல் பிழைகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள நிலப் பற்றாக்குறை ஆகியவை இதில் நிலவும் முக்கிய பிரச்சனையாக உள்ளதாக குறிப்பிட அரசு. எனவே, இப்பிரச்சினைக்கு படிப்படியாகத் தீர்வு காணும் விதமாக புதிய மாநில வீட்டுவசதித் திட்டமான வெற்றி வீடு திட்டம் அரசால் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<h2>வெற்றி வீடு திட்டம் -தகுதிகள் என்ன.?</h2>
<ul>
<li>விண்ணப்பதாரர் பெயரில் சொந்தமாக நிலம் அல்லது அதற்குரிய சட்டப்பூர்வ பட்டா இருக்க வேண்டும்.</li>
<li>தற்போது ஓலை, வைக்கோல் அல்லது களிமண் சுவர்களுடன் கூடிய முழுமையான குடிசையில் வசிப்பவராக இருக்க வேண்டும்.</li>
<li>அரசு புறம்போக்கு நிலங்களில் குடிசை அமைத்து வசிப்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் வீடு கட்ட முடியாது.</li>
<li>கிராமப்புறத்தில் வசிக்கும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை எளிய குடும்பங்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.</li>
</ul>
<p>தகுதியானவர்கள் தங்கள் ஊரில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்க வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர் அடங்கிய சிறப்புக் குழுவினர் மூலமாக பயனாளிகள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.</p>
<h2>தேவைப்படும் ஆவணங்கள்</h2>
<ul>
<li>ஆதார் அட்டை</li>
<li>குடும்ப அட்டை</li>
<li>ஆவணம் / பட்டா மற்றும் சிட்டா நகல்</li>
<li>வருமானச் சான்றிதழ்</li>
<li>வாக்காளர் அடையாள அட்டை</li>
<li>பாஸ்போர்ட் அளவு புகைப்படம்</li>
<li>வங்கி கணக்கு விவரங்கள்</li>
<li>சொந்த வீடு இல்லை என்பதற்கான சுய உறுதிமொழிப் பத்திரம் </li>
</ul>
<h2>எங்கே விண்ணப்பிப்பது.?</h2>
<p>வெற்றி வீடு திட்டத்தில் பயன் பெறும் வகையில் உங்கள் உள்ளூர் கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். பயனாளிகள் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அடங்கிய குழுவினரின் நேரில் சென்று விசாரணை நடத்தி பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/powerful-ev-cars-which-car-offers-the-best-mileage-271561" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article