
<p>நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என ஊர் பஞ்சாயத்து சட்டம் இயற்றியுள்ளது. </p>
<h2>மதுவால் சீரழியும் சமூகம்</h2>
<p>தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாக மது மற்றும் போதை பழக்கம் உருவெடுத்துள்ளது. இதனை தடுக்க தவெக அரசு மிகப்பெரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பள்ளி மாணவர்கள் கூட போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டதாகவும், இதில் பெண் குழந்தைகளும் தப்பவில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே டாஸ்மாக்கால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விட்ட நிலையில், இளம் தலைமுறையினரும் போதைக்கு அடிமையாவது மிகப்பெரிய அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. </p>
<p>போதைப் பழக்கத்தால் இளைஞர்கள் தடம் மாறி செல்வதோடு திருமண வாழ்வில் பிரச்னை, மன அழுத்தத்தால் விபரீத முடிவு எடுப்பது, தவறான பழக்கங்களில் ஈடுபடுவது என விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடைபெறுகிறது. முன்பெல்லாம் போதை பழக்கம் இருந்தால் பெரும்பாலான குடும்பம் கவலைப்பட்ட நிலையில் இப்போது அந்த கவலை குறைந்து அதனை கண்டும் காணாமலும் கடந்து செல்லும் மனநிலைக்கு அனைவரும் வந்துவிட்ட கொடூரமான சூழ்நிலை நிலவுகிறது. </p>
<p><iframe title="Thangam thennarasu |"15,000 கோடி எப்படி வந்துச்சு”POINT-ஐ பிடித்த தங்கம்! பல்பு வாங்கிய மரிய வில்சன்" src="https://www.youtube.com/embed/bTRUetrJjfU" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2><strong>மாற்றம் காண விரும்பும் மக்கள்</strong></h2>
<p>ஆனால் தமிழ்நாட்டில் புதிதாக அமைந்த <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசு இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் என மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அரசும் அதற்கேற்ப பிரத்யேகமாக குழு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இப்படியான நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமமான விழுந்தமாவடி பஞ்சாயத்து நிர்வாகம் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. </p>
<p>இதுதொடர்பாக ஊரின் பல பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில், “பொதுமக்கள் கவனத்திற்கு .. மதுவை ஒழிப்போம்! மக்களை காப்போம்.. நமது கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் நலன் பொதுசுகாதாரம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு 02.08.2026 முதல் ஊரில் திருமணம் ஆகாதவர்கள் (இளைஞர்கள்) மது அருந்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.மேலும் திருமணம் ஆகாதவர்கள் மது அருந்துவதை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் ரூ. 5000/- அபராதம் வசூலிக்கப்படும்.</p>
<p>இதனுடன் திருமணம் ஆனவர்கள் குடிபோதையில் வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ பிரச்சனைகள் ஏற்பட்டு நமது ஊருக்கு வரும் பட்சத்தில் ரூ.5000/-அயராதம் வசூலிக்கப்படும். இந்த நல்ல முயற்சிக்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தகவல் அளிப்பவர்களுக்கு 2,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். இன்றைய சரியான முடிவு நாளைய சிறந்த எதிர்காலத்தைஉருவாக்கும் மதுவை தவிர்போம், நம் எதிர்கால வாழ்கையையும். நம் சமூகத்தையும் பாதுகாப்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கிராம பஞ்சாயத்தின் முடிவு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/health-tips-how-to-lose-5-kg-of-weight-in-a-month-270335" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article