
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: திமுக ஆர்ப்பாட்டத்தில் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக எழுந்த சர்ச்சையால் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தஞ்சை மாவட்டம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் தஞ்சை நகரில் மட்டும் 430-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 983 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். </p>
<p style="text-align: justify;">உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சாவூர் நகரில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் தொடர்பாக, தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 430-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட சுமார் 983 தி.மு.க. நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">காவிரி உரிமை மீட்பு மற்றும் மேகதாது விவகாரம் தொடர்பாக தஞ்சாவூரில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக த.வெ.க. மகளிர் அணியினர் அளித்த புகாரின் பேரில் <a title="உதயநிதி ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/udhayanidhi-stalin" data-type="interlinkingkeywords">உதயநிதி ஸ்டாலின்</a> கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் அண்ணாசிலை அருகிலும் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
<p style="text-align: justify;">தஞ்சாவூர் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான துரை சந்திரசேகரன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு பஸ்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து த.வெ.க. கொடிகளை எறிந்தும், முதலமைச்சரின் உருவபொம்மையை தீ வைத்து எரித்தும் போராட்டம் நடத்தினர்.</p>
<p style="text-align: justify;">அப்போது தி.மு.க. மற்றும் த.வெ.க.வினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் செருப்பு மற்றும் கற்களை வீசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.</p>
<p style="text-align: justify;">இந்த நிலையில், அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் நடத்தியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய போலீசார் 150-க்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">இதேபோல், தஞ்சாவூர் ரயிலடியில் அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் 80 தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், த.வெ.க. நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மேலும் 100 பேர் மீது கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முதலமைச்சரின் படங்கள் இடம்பெற்ற பிளக்ஸ் பேனர்களை எரித்து போராட்டம் நடத்தியதாக தஞ்சாவூர் தெற்கு காவல் நிலைய போலீசார் 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">இதன் மூலம் தஞ்சாவூர் நகரில் மட்டும் பல்வேறு போராட்டங்கள் தொடர்பாக 430-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தஞ்சை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p style="text-align: justify;">இதேபோல், தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட சுமார் 983 தி.மு.க. நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதி <a title="ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/mk-stalin" data-type="interlinkingkeywords">ஸ்டாலின்</a> கைது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர்களை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும் தி.மு.க.வினர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, போராட்டங்கள் தொடர்பான வீடியோ பதிவுகள் மற்றும் புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதால், வழக்குகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.</p>
Source: Read Full Article