
<p style="text-align: left;">பெரியபாளையம் அருகே நள்ளிரவில் ஆட்டோ முன்னால் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். மூவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p>
<p style="text-align: left;">சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் லோகநாதன் 42, மனைவி பூங்கொடி 39, மகள் தனலட்சுமி 10, மாமியார் ராதா 65, மைத்துனர் மகன்கள் கோகுல் 10, பிரசாந்த் 15 ஆகியோர் நேற்று இரவு பெரியபாளையம் கோயிலுக்கு ஒரே ஆட்டோவில் வந்துள்ளனர். லோகநாதன் ஆட்டோவை ஓட்டிக் கொண்ட வந்தபோது பன்பாக்கம் அருகே உள்ள எம்டிசி பேருந்து நிறுத்தம் அருகே முன்னால் சென்ற லாரி மீது ஆட்டோ பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. </p>
<p style="text-align: left;"> </p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/7bzthv8_fM4?si=HzvKzHSjngwH7KvF" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p style="text-align: left;">இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனரின் மனைவி பூங்கொடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு அருகே உள்ள பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாமியார் ராதா, மைத்துனர் மகன் கோகுல் ஆகிய இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த மூவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்த மூவரது சடலங்களை கைப்பற்றிய பெரியபாளையம் காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக பெரியபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p>
<p style="text-align: left;">பெரியபாளையம் கோவிலுக்கு வழிபாட்டிற்காக வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p style="text-align: left;"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article