
<p style="text-align: justify;"><strong>திருச்சி:</strong> வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் வெப்பத் தாக்கம், காற்று மாசு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளை கட்டுப்படுத்தவும், நகரின் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும் திருச்சி மாநகராட்சி ஒரு அதிரடியான அட்டகாச நடவடிக்கையில் இறங்கியுள்ளது.</p>
<p style="text-align: justify;"> ஜப்பானிய தாவரவியல் வல்லுநர் அகிரா மியாவாக்கி உருவாக்கிய முறையை அடிப்படையாகக் கொண்டு நகரின் பல்வேறு பகுதிகளில் அடர்ந்த குறுங்காடுகளை உருவாக்கும் திட்டம்தான் அது. தற்போது திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அதை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/05/cd3217ae65805ae41b995e4a41fac9f51785930999215733_original.jpg" /></p>
<p style="text-align: justify;">நகரத்தில் சாலைகள், கட்டிடங்கள், வாகனங்கள் என கான்கிரீட் பரப்பு அதிகரித்து வரும் நிலையில், அதற்கு நடுவே பசுமைப் பரப்பை உருவாக்கும் முயற்சியாக மியாவாக்கி குறுங்காடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. “நகரம் வளரட்டும்… மரங்களும் அதே வேகத்தில் வளரட்டும்” என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.</p>
<p style="text-align: justify;"><strong>திருவானைக்கோவிலில் புதிய அடர்வனம்</strong></p>
<p style="text-align: justify;">திருச்சி மாநகராட்சி மண்டலம் 1-க்குட்பட்ட திருவானைக்கோவில் ஸ்ரீராம் நகர் பூங்காவில் சுமார் 3,575 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய மியாவாக்கி குறுங்காடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஒரே கட்டமாக சுமார் 10,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. வழக்கமாக மரங்களை ஒன்றுக்கு ஒன்று இடைவெளி விட்டு நடும் முறைக்கு மாறாக, மியாவாக்கி முறையில் அதிக எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நெருக்கமாக நடப்படுவதால், குறுகிய காலத்திலேயே அடர்த்தியான பசுமைப் பகுதியை உருவாக்க முடியும்.</p>
<p style="text-align: justify;">இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங், மாநகராட்சி அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.</p>
<p style="text-align: justify;"><strong>26 வகையான நாட்டு மரங்கள்</strong></p>
<p style="text-align: justify;">திருவானைக்கோவிலில் உருவாக்கப்பட்டுள்ள இந்த குறுங்காட்டில் சுமார் 26 வகையான பாரம்பரிய நாட்டு மரக்கன்றுகள் இடம்பெற்றுள்ளன. நிழல் தரும் மரங்கள், பூக்கும் மரங்கள், கனி தரும் மரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அதிக பயன் அளிக்கும் மரங்கள் என பல்வேறு வகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.</p>
<p style="text-align: justify;">வேம்பு, புங்கை, இலுப்பை, நாவல் உள்ளிட்ட நாட்டு மரங்கள் இதில் முக்கிய இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் மரங்கள் வளர்வதுடன், எதிர்காலத்தில் பறவைகள், பட்டாம்பூச்சிகள், தேனீக்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களுக்கும் வாழ்விடமாக இந்த பகுதி மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p style="text-align: justify;"><strong>மரம் நடுவது மட்டும் அல்ல… பராமரிப்பும் முக்கியம்!</strong></p>
<p style="text-align: justify;">மரக்கன்றுகளை நட்டு விட்டு அதன் பிறகு அவற்றை மறந்து விடாமல், அவை முறையாக வளர்வதற்கான பராமரிப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மரக்கன்றுகளுக்கு தேவையான தண்ணீரை சிக்கனமாகவும் சீராகவும் வழங்க சொட்டுநீர்ப் பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மரக்கன்றுகளை கால்நடைகள் உள்ளிட்டவற்றால் சேதமடையாமல் பாதுகாக்க வேலி அமைக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p>
<p style="text-align: justify;"><strong>தனியார் நிறுவனங்களும் கைக்கோர்த்தன</strong></p>
<p style="text-align: justify;">திருவானைக்கோவில் பகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த பசுமைத் திட்டத்திற்கு கே.ஆர்.டி மோட்டார்ஸ் மற்றும் ஹீரோ குழுமம் ஆகிய நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி எனப்படும் CSR நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அரசு அமைப்புகளுடன் தனியார் நிறுவனங்களும் கைகோர்த்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது, நகர்ப்புறங்களில் பசுமைப் பரப்பை விரைவாக அதிகரிக்க உதவும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;"><strong>மியாவாக்கி முறையின் தனிச்சிறப்பு என்ன?</strong></p>
<p style="text-align: justify;">ஜப்பானிய தாவரவியல் வல்லுநர் அகிரா மியாவாக்கியால் பிரபலப்படுத்தப்பட்ட மியாவாக்கி முறையில், பல்வேறு உள்ளூர் மரவகைகள் அதிக அடர்த்தியில் நடப்படுகின்றன. இயற்கையான காடு உருவாகும் முறையைப் பின்பற்றி மண்ணை மேம்படுத்தி, பல்வேறு வகையான தாவரங்களை இணைத்து வளர்ப்பதே இதன் முக்கிய சிறப்பாகும். வழக்கமான மரக்கன்றுகள் நடும் முறையை விட மியாவாக்கி முறையில் மரங்கள் வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரக்கூடிய சூழல் உருவாக்கப்படுகிறது. இதனால் குறுகிய காலத்திலேயே சிறிய பரப்பளவில் கூட அடர்ந்த பசுமைப் பகுதியை உருவாக்க முடியும்.</p>
<p style="text-align: justify;"><strong>நகர வெப்பத்தை குறைக்க உதவும்</strong></p>
<p style="text-align: justify;">கோடை காலங்களில் கான்கிரீட் கட்டிடங்கள் மற்றும் சாலைகள் அதிகமாக உள்ள நகர்ப்புறங்களில் வெப்பம் அதிகமாக உணரப்படுகிறது. இதனை ‘Urban Heat Island’ எனப்படும் நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு மேலும் தீவிரப்படுத்துகிறது. இந்த நிலையில் அதிக அளவில் மரங்கள் வளர்க்கப்படுவதன் மூலம் நிழல் கிடைப்பதுடன், சுற்றுப்புற வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும் காற்றின் தரத்தை மேம்படுத்தவும் உதவும். மழைநீர் மண்ணுக்குள் செல்வதற்கும், உள்ளூர் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதற்கும் பசுமைப் பகுதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.</p>
<p style="text-align: justify;"><strong>ஐந்து மண்டலங்களிலும் விரிவாக்கம்</strong></p>
<p style="text-align: justify;">திருச்சி மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் மியாவாக்கி குறுங்காடுகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுப் பூங்காக்கள், சாலையோரப் பகுதிகள், ஆற்றுப்படுகைகள், குளக்கரைகள் உள்ளிட்ட பொருத்தமான இடங்கள் இதற்காக பயன்படுத்தப்பட உள்ளன.</p>
<p style="text-align: justify;">2026–27 ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டில், இந்த பசுமைத் திட்டத்திற்காக மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து மண்டலங்களிலும் தலா 2 பூங்காக்கள் வீதம் மொத்தம் 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு மியாவாக்கி குறுங்காட்டுக்கும் சுமார் ரூ.1.50 கோடி வரை செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">ஒவ்வொரு இடத்தின் பரப்பளவுக்கு ஏற்ப சுமார் 10,000 மரக்கன்றுகள் வரை நடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;"><strong>நாளைய திருச்சிக்கு இன்று பசுமை தேவை</strong></p>
<p style="text-align: justify;">தொழில்மயமாக்கல், வாகனப் பெருக்கம், கட்டிடங்களின் அதிகரிப்பு என திருச்சி நகரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதற்கேற்ற வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் வேகம் பெற வேண்டியது அவசியமாகியுள்ளது. ஒரு மரம் வளர்வதற்கு ஆண்டுகள் தேவைப்பட்டாலும், ஒரு நகரத்தின் வெப்பநிலை உயர்வதற்கு சில ஆண்டுகளே போதுமானதாகிவிடும். எனவே, நகர வளர்ச்சியுடன் பசுமை வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">திருச்சி மாநகராட்சியின் மியாவாக்கி குறுங்காடு திட்டம் தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டால், எதிர்காலத்தில் கான்கிரீட் கட்டிடங்களுக்கு நடுவே பசுமையான சுவாசப் பகுதிகளைக் கொண்ட நகரமாக திருச்சி மாறுவதற்கான வாய்ப்பு உருவாகும். இன்று நடப்படும் இந்த 10 ஆயிரம் மரக்கன்றுகள், நாளைய தலைமுறைக்கு வழங்கப்படும் பசுமையான பரிசாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.</p>
Source: Read Full Article