
<p>புதுச்சேரி: திருபுவனையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஆய்வு செய்வதற்காக சென்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்எல்ஏ சாய் ஜெ. சரவணன்குமாரை, சாதி பெயரை குறிப்பிட்டு நிறுவனத்துக்குள் அனுமதிக்க மறுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், 2 ஹெச்ஆர் மேலாளர்கள் உள்ளிட்ட 30 பேர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
<h2>தொழிற்சாலையில் ஆய்வு</h2>
<p>புதுச்சேரி அடுத்த திருபுவனையில் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பட்டியலின தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுவதாகவும், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குளம் மற்றும் கோயில் இடங்கள் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது.</p>
<p>இந்த புகார்களின் அடிப்படையில், தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் கடந்த 21-ம் தேதி தொழிற்சாலையை நேரில் பார்வையிட சாய் ஜெ. சரவணன்குமார் சென்றதாக தெரிகிறது. காவல்துறை அதிகாரிகள், கொம்யூன் அதிகாரிகள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு முறைப்படி தகவல் தெரிவித்துவிட்டு சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<h2>‘சாதியை குறிப்பிட்டு தடுத்தனர்’</h2>
<p>தொழிற்சாலையின் நுழைவாயிலில் இருந்தபோது, ஹெச்ஆர் மேலாளர்கள் அருண்குமார், சிவசங்கர் உள்ளிட்டோர் தன்னையும் தனது உதவியாளர்களையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார்.</p>
<p>மேலும், தன்னையும் தனது உதவியாளர்கள் நான்கு பேரையும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என சாதியை குறிப்பிட்டு, நிறுவனத்துக்குள் வரக்கூடாது என்று தெரிவித்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இதனால் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள காவலாளி அறையில் அமர வைக்கப்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக அங்கிருந்து வெளியேறியதாகவும் சாய் ஜெ. சரவணன்குமார் தெரிவித்துள்ளார்.</p>
<h2>போலீசில் புகார்</h2>
<p>இந்த சம்பவம் தொடர்பாக சாய் ஜெ. சரவணன்குமார் புதுச்சேரி பிசிஆர் செல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், சாதியின் அடிப்படையில் தன்னை நிறுவனத்துக்குள் அனுமதிக்க மறுத்ததாக கூறி, சம்பந்தப்பட்ட ஹெச்ஆர் மேலாளர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.</p>
<p>புகாரின் அடிப்படையில் பிசிஆர் செல் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியம் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.</p>
<p>இதைத்தொடர்ந்து, தனியார் நிறுவனத்தின் ஹெச்ஆர் மேலாளர்கள் அருண்குமார், சிவசங்கர், 2 காவலாளிகள் மற்றும் பெயர் தெரியாதவர்கள் உள்ளிட்ட மொத்தம் 30 பேர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
<h2>எம்எல்ஏ மீதும் வழக்கு</h2>
<p>இதற்கிடையே, தொழிற்சாலை நிர்வாகம் தரப்பிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், சாய் ஜெ. சரவணன்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனுமதியின்றி நிறுவனத்துக்குள் நுழைந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில், <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது திருபுவனை காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே சம்பவம் தொடர்பாக எம்எல்ஏ தரப்பில் தொழிற்சாலை நிர்வாகத்தினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்டுள்ளதும், தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதும் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
Source: Read Full Article