
<p><strong>TVK Govt Project Meghalaya:</strong> முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை கவிழ்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட விவகாரத்தில், ஊடகவியலாளர் ஒருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p>
<h2><strong>”ப்ராஜெக்ட் மேகாலயா” - தவெக அரசுக்கு ப்ளான்</strong></h2>
<p>பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்து முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை கவிழ்ப்பதற்கான, ”ப்ராஜெக்ட் மேகாலயா” என்ற பெயரில் திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரிடமும் அண்மையில் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/what-are-the-side-effects-of-eating-too-much-salt-details-in-pics-267707" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<h2><strong>15 எம்.எல்.ஏக்களுக்கு ஸ்கெட்ச்</strong></h2>
<p>தீவிர விசாரணையில் ”ப்ராஜெக்ட் மேகாலயா” என்ற பெயரில் ஆட்சி கவிழ்ப்பு தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்து அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறச் செய்து, முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> தலைமையிலான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.</p>
<h2><strong>ஊடகவியலாளரிடம் தீவிர விசாரணை:</strong></h2>
<p>இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியுடன் தொடர்பில் இருந்ததாக, தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் மூத்த ஊடகவியலாளரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருநாவுக்கரசு எனும் முக்கிய குற்றவாளிக்கு அந்த ஊடகவியலாளர் குறுந்தகவல்களை அனுப்பியதற்கான ஆதரங்கள் கிடைத்துள்ளன. இருவருக்கும் இடையே தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 15 மற்றும் 16 ஆகிய இரண்டு தேதிகளிலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதோடு, ஊடகவியலாளரின் செல்போனும் தடயவியல் பரிசோதனைக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாம். </p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/Y_i6XKoBuH8?si=M3Aj3kfWISMfG3A3" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2><strong>ப்ரஸ் க்ளப் கண்டனம்:</strong></h2>
<p>காவல்துறையின் இந்த நடவடிக்கையை, பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி எனக் கூறி சென்னை பத்திரிகையாளர் சங்கம் விமர்சித்துள்ளது. ஜூலை 15 அன்று குறிப்பிட்ட ஊடகவியலாளரிடம் நள்ளிரவு வரை விசாரணை நடத்தப்பட்டதாகவும், முறையான நடைமுறைகள் இன்றி அவரது கைபேசி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தொடர் விசாரணைக்காக மறுநாள் மீண்டும் அழைக்கப்பட்டதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம், விசாரணையானது வழக்கமான சட்ட நடைமுறைகளின்படியே நடைபெற்று வருவதாக காவல்துறை வலியுறுத்தியுள்ளது.</p>
<p>எம்.எல்.ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பாக இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் திமுக அமைச்சர் <a title="செந்தில் பாலாஜி" href="https://tamil.abplive.com/topic/senthil-balaji" data-type="interlinkingkeywords">செந்தில் பாலாஜி</a> மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்த திமுக, அரசியல் ஆதாயத்திற்காக தவெக பொய்க் குற்றச்சாட்டுகளைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டியுள்ளதுடன், சட்ட வழிகள் மூலம் பதிலளிப்போம் என்றும் தெரிவித்துள்ளது.</p>
<p><a title="TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?" href="https://tamil.abplive.com/jobs/tnpsc-group-1-preliminary-exam-date-shifted-from-06-09-2026-know-new-schedule-govt-job-vacancy-other-details-267831" target="_self">TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?</a></p>
<h2><strong>குற்றச்சாட்டு என்ன?</strong></h2>
<p>சட்டமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பின் போது கட்சியின் கொறடா உத்தரவை மீறுமாறு குறைந்தபட்சம் ஒரு தவெக சட்டமன்ற உறுப்பினரையாவது வற்புறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மையமாகக் கொண்டு இந்த வழக்கு அமைந்துள்ளது. ஊத்தங்கரை தொகுதி <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> சட்டமன்ற உறுப்பினரான இளையராஜா இந்தப் புகாரை அளித்துள்ளார். IPDS என்ற கருத்துக்கணிப்புக் குழுவை நடத்தி வரும் யூடியூபர் திருநாவுக்கரசு மற்றும் பிறர், தனது கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக வாக்களிப்பதற்காக தனக்கு 35 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அந்த சலுகையை மறுத்ததால், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல்கள் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.</p>
Source: Read Full Article