
<h2>தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள்</h2>
<p>தமிழகத்தில் சுமார் 4ஆயிரம் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கு வருவாயானது தமிழக அரசுக்கு கிடைத்து வருகிறது. அதுவும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என்றால் 200 - 300 கோடியை மதுவிற்பனை தாண்டும். தற்போதைய நவநாகரீக காலத்தில் மது குடிப்பது சர்வ சாதாரணமாக மாறி விட்டது. நண்பர்கள் கூட்டத்தில் மது குடிக்காதவர்களை ஒதுக்கி வைக்கும் நிகழ்வுகளும் பல இடங்களில் அரங்கேறி வருகிறது. அதிலும் இரவு விருந்துகளில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் கையிலும் மது கோப்பைகள் சர்வ சாதரணமாக காணப்படுகிறது.</p>
<h2>மதுப்பிரியர்களுக்கான புதிய வசதிகள்</h2>
<p>எனவே மதுப்பிரியர்களை கவரும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக வெளிநாட்டு மதுபானங்கள் கிடைக்கும் வகையில் எலைட் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு சாப்பிட்டுக்கொண்டே மது குடிக்கும் ரெஸ்டோ பார்களை அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது டாஸ்மாக் நிர்வாகமே ரெஸ்டோ பார் அமைக்க திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பார்களின் எண்ணிக்கையை குறைத்து ரெஸ்டோ பார் அமைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.</p>
<h2>மதுப்பிரியர்களுக்கு குஷியான தகவல்</h2>
<p>இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த ஆட்சியில் குறிப்பிட்ட மதுபான நிறுவனங்களிடம் இருந்தே மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய புதிய நிறுவனங்களிடம் இருந்து மதுப்பிரியர்களுக்காக பிராந்தி, விஸ்கி, பீர் உள்ளிட்டவைகள் இறக்குமதி செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டாலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கிடைக்கும் பிரபல நிறுவனத்தில் மதுபானங்கள் தமிழகத்தில் கிடைக்கவில்லையென மதுப்பிரியர்கள் வேதனை தெரிவித்திருந்தனர்.</p>
<h3>54 நிறுவனங்களில் புதிய வகை சரக்குகள்</h3>
<p>இந்த நிலையில் மதுப்பிரியர்களின் ஏக்கத்தை குறைக்கும் வகையில் மேலும் 54 நிறுவனங்களின் பீர், பிராந்தி, விஸ்கி, ரம் உள்ளிட்டவைகளை இறக்குமதி செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த மதுபானங்கள் விரைவில் டாஸ்மாக் கடைகளுக்கு வரும் என கூறப்படுகிறது. எனவே தங்களுக்கு பிடித்த மதுபானங்களை வாங்க முடியும் என்பதால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், மதுப்பிரியர்கள் பீரிமியம் வகை மதுபானங்களை அதிகமாக விரும்பி கேட்கிறார்கள். எனவே இது தொடர்பாக ஆலோசனைக்கு பிறகு புதுவகையான மதுபானங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/food/how-to-make-crispy-and-delicious-dosa-at-home-267612" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article