
<h2>டாஸ்மாக்கில் கொட்டும் வருவாய்</h2>
<p>தமிழகத்தில் சுமார் 4,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கப்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் தினந்தோறும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டப்பட்டு வருகிறது. அதுவே பண்டிகை காலம் என்றால் இரண்டு மடங்காக விற்பனை அதிகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இதனையடுத்து இதனை கட்டுப்படுத்த புதிதாக வந்த தவெக அரசு முடிவெடுத்தது. ஆனால் டாஸ்மாக் ஊழியர்களோ தங்களது மாதம் ஊதியம் 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை வைத்து எப்படி குடும்பம் நடத்துவது என கேள்வி எழுப்பினர். </p>
<h2>டாஸ்மாக் ஊழியர்களுக்கு இஎஸ்ஐ</h2>
<p>மேலும் தங்களது ஊதியத்தை உயர்த்தி கொடுக்கும் வேண்டும், இதே போல டாஸ்மாக் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த வகையில் கடந்த மாதம் டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியத்தை 25% அதிகப்படுத்தி <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் அடுத்த அறிவிப்பாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு இஎஸ்ஐ கட்டாயப்படுத்தி டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக <br />இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் நந்தகுமார் வெளியிட்டுள்ள உத்தரவில், "டாஸ்மாக் பணியாளர்களுக்கு நடைமுறையில் உள்ள Health Fund-cum-Accident Injury Disablement Relief Fund Scheme-க்கு பதிலாக இஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்துவதற்கு கடந்த ஜூலை 06- ஆம் தேதி நடைபெற்ற இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் விரிவான ஆலோசனைக்குப் பிறகு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். </p>
<h2>அனைத்து ஊழியர்களுக்கும் இஎஸ்ஐ கட்டாயம்</h2>
<p>எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட மேலாளர்களும், தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட Employees' State Insurance Corporation (ESIC) பிராந்திய அல்லது துணைப் பிராந்திய அலுவலகங்களை உடனடியாகத் தொடர்புக் கொண்டு டாஸ்மாக் நிறுவனத்திற்கென தனித்தனி இஎஸ்ஐ கணக்குகளை உருவாக்க வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைத்து சில்லறை மதுபானக் கடை பணியாளர்களையும் ஆன்லைன் மூலம் இஎஸ்ஐ திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும், உயர்ந்த முன்னுரிமையுடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தியுள்ளார். டாஸ்மாக்கில் பணியாற்றும் எந்த பணியாளரும் இஎஸ்ஐ திட்டத்திற்கு வெளியே இருக்கக் கூடாது எனவும் அனைத்து மூத்த மண்டல மேலாளர்களும் (Senior Regional Managers), மாவட்ட மேலாளர்கள் மேற்கொள்ளும் பதிவு பணிகளை தினசரி கண்காணித்து, இஎஸ்ஐ திட்டத்தில் பதிவுச் செய்யப்பட்ட பணியாளர்களின் விவரங்களை நாள்தோறும் புதுப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். </p>
<h3> ஜூலை 24 ஆம் தேதி அறிக்கை அளிக்க உத்தரவு</h3>
<p>இந்த பணிகள் தொடர்பான முழுமையான அறிக்கையை வருகிற ஜூலை 24 ஆம் தேதிக்குள் டாஸ்மாக் தலைமையிடத்தில் சமர்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த புதிய உத்தரவின் மூலம் டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களும் மருத்துவச் சிகிச்சை, விபத்து நிவாரணம், மகப்பேறு நலன், நோய்வாய்ப்பட்ட கால உதவித்தொகை உள்ளிட்ட இஎஸ்ஐ சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பல்வேறு சமூகப் பாதுகாப்பு நலன்களை பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. </p>
<p> </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/how-to-prevent-paint-from-peeling-off-walls-due-to-moisture-268538" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<p> </p>
Source: Read Full Article