
<div style="text-align: justify;">இந்திய ரயில்வே நீண்ட காலமாக டிக்கெட் முன்பதிவில் பயணிகள் சந்திக்கும் சிக்கல்களை தீர்க்கும் வகையில் IRCTC இணையதளத்தில் புதிய வசதிகளை கொண்டு வர உள்ளது. நவீன ஏஐ தொழில்நுட்பங்களுடன் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை ஜூலை 15ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளது.</div>
<div><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/11/a3db4c3ff3bd94f7c3c1980e62696e001783762640403193_original.JPG" /></div>
<div style="text-align: justify;"> </div>
<div style="text-align: justify;">மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் தற்போதைய ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஏற்படும் சிக்கல்கள், குறிப்பாக 'கேப்ட்சா' சரிபார்ப்பு மற்றும் அடிக்கடி இணையதளம் முடங்கி போவது போன்ற புகார்களை முன்வைத்தனர்.</div>
<div style="text-align: justify;"> </div>
<div style="text-align: justify;">மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஜூலை 15ஆம் தேதி முதல் புதிய ஐஆர்சிடிசி தளம் பயன்பாட்டுக்கு வரும் என அறிவித்தார். இதன்படி ஐஆர்சிடிசி தளத்தில் பல்வேறு வசதிகள் கொண்டு வரப்பட உள்ளன. டிக்கெட் முன்பதிவில் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணும் வகையில் புதிய இணையதளம் இருக்கும் என சொல்லப்படுகிறது.</div>
<div style="text-align: justify;"> </div>
<div style="text-align: justify;">புது ஐஆர்சிடிசி தளம் பயன்பாட்டுக்கு வந்த உடன் டிக்கெட் முன்பதிவில் தற்போது நிலவும் தாமதங்கள் நீக்கப்பட்டு, முன்பதிவு செயல்முறை மிகவும் வேகப்படுத்தப்படும். பலருக்கும் எரிச்சலூட்டும் 'கேப்ட்சா' சரிபார்ப்பு முறை மாற்றப்பட்டு, உண்மையான பயணிகள் விரைவாக டிக்கெட் பதிவு செய்யும் வகையில் எளிமையான முறை அறிமுகப்படுத்தப்படும். குறிப்பாக டிக்கெட் முன்பதிவின் போதே டிக்கெட் உறுதியாக கிடைக்குமா கிடைக்காதா என்பதை ஏஐ கொண்டு துல்லியமாக காட்டி விடுமாம். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் இணையதளத்தைப் பயன்படுத்தினாலும், தடையின்றி செயல்படும் வகையில் சர்வர் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.</div>
<div><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/11/4648663afb3242d7e3d7de21eb20da751783762492767193_original.JPG" /></div>
<div style="text-align: justify;"> </div>
<div style="text-align: justify;">நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் திறன் இதற்கு இருக்கும் என கூறப்படுகிறது. பயனர்களுக்கு எளிமையான மற்றும் தெளிவான navigation வசதியுடன் கூடிய நவீன வடிவமைப்பு இணையதளத்திற்கு வழங்கப்பட உள்ளது. பயணிகள் தங்களுக்கு விருப்பமான இருக்கையை தேர்ந்தெடுக்கும் வசதி மற்றும் ரயில் முன்பதிவு குறித்த தெளிவான தகவல்கள் மேம்படுத்தப்பட உள்ளன என அதிகாரிகள் கூறுகின்றனர்.</div>
<div style="text-align: justify;"> </div>
<div style="text-align: justify;">இந்தியாவில் சுமார் 88 சதவீத ரயில் டிக்கெட்டுகள் டிஜிட்டல் முறையிலேயே முன்பதிவு செய்யப்படுகின்றன. குறிப்பாக, தட்கல் போன்ற அவசர கால டிக்கெட் முன்பதிவில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் புதிய இணையதளம், லட்சக்கணக்கான பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும் என ரயில்வே அமைச்சகம் எதிர்பார்க்கிறது.</div>
<div style="text-align: justify;"> </div>
<div style="text-align: justify;">பல்வேறு இந்திய மொழி பேசுபவர்களும் எளிமையாக பயன்படுத்தும் வகையில் பல மொழிகளை கொண்ட ஒரு இணையதளமாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்திய ரயில்வே அவ்வப்போது நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வருகிறது. பயணிகள் இந்த மாற்றங்களை தெரிந்து வைத்து கொள்வது நல்லது.</div>
Source: Read Full Article