
<p>குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையுடன் அருகில் உள்ள நியாய விலைக் கடைக்குச் சென்று 31.07.2026-க்குள் கைரேகை பதிவினை கட்டாயமாக செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. தகவல்</p>
<p><strong> e-KYC கைரேகையினை கட்டாயமாக பதிவு செய்திட வேண்டும்</strong> <br /> <br />விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளதாவது, தமிழக அரசு, தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள், குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் e-KYC கைரேகையினை கட்டாயமாக பதிவு செய்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. எனவே, இதுவரை கைரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையுடன் அருகில் உள்ள நியாய விலைக் கடைக்குச் சென்று 31.07.2026-க்குள் கைரேகை பதிவு செய்து e-KYC மேற்கொள்ள வேண்டும். மேலும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள், தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று வரும் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்து தங்கள் உரிமையை உறுதி செய்ய வேண்டும்.</p>
<p><strong>வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நீக்கம் செய்ய வேண்டும்.</strong><br /><br />இறந்த உறுப்பினர்களின் பெயர்களை வரும் 25 ஆம் தேதிக்குள் வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நீக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில் தங்களது பகுதியில் உள்ள நியாய விலைக் கடை விற்பனையாளரிடம் இறந்த உறுப்பினரின் குடும்ப அட்டை எண்ணுடன் ஆதார் அட்டையின் நகலை வழங்க வேண்டும். கைரேகை இல்லாத குழந்தைகள் மற்றும் முதியோர்கள் முதலில் தங்கள் ஆதார் அட்டையில் கைரேகை மற்றும் கண் பதிவை புதுப்பித்த பின்னரே e-KYC மேற்கொள்ள வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 18,00,580 உறுப்பினர்களில் 16,34,820 நபர்கள் பதிவு செய்துள்ளனர். 1,65,760 நபர்கள் பதிவு செய்யாமல் உள்ளனர். இப்பணி 90.79% நிறைவடைந்துள்ளது.</p>
<p><strong>e-KYC கைரேகை பதிவு செய்து கொள்ளலாம்</strong><br /> <br />இதற்காக அருப்புக்கோட்டை , காரியாபட்டி, இராஜபாளையம், சாத்தூர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், திருச்சுழி, வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, விருதுநகர் ஆகிய பத்து வட்டாட்சியர் அலுவலங்களில் உள்ள ஆதார் இ-சேவை மையங்களை அணுகி ஆதார் புதுப்பிப்பை மேற்கொண்ட பிறகு குடும்ப அட்டையுடன் நியாயவிலைக் கடைக்குச் சென்று e-KYC கைரேகை பதிவு செய்து கொள்ளலாம்" என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.தெரிவித்துள்ளார்.</p>
Source: Read Full Article