
<p style="text-align: justify;">காவிரி நீர், மேகதாது விவகாரம் உள்ளிட்டவைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதல்வர் விஜய், வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடகா சென்று அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் வினோத்தும் அதை உறுதிப்படுத்தினார். இந்நிலையில், முதல்வர் விஜயின் கர்நாடக மாநில பயணம் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அவரது பயணத் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக முதல்வர் அலுவலக அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.</p>
<p style="text-align: justify;"><strong><em>கர்நாடகா செல்வதில் என்ன பிரச்னை ?</em></strong></p>
<p style="text-align: justify;">காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு, ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட சட்ட அமைப்புகளின்படியே தமிழ்நாடும் - கர்நாடகாவும் நடந்துகொள்ள வேண்டும், காவிரி விவகாரத்தில் கர்நாடகா முதல்வரை நேரில் சந்தித்து பேசினால் இந்த பிரச்னையில் எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்கத் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக, காவிரி நீர் தொடர்பான சதி வலையில் தமிழ்நாடு சிக்கக் கூடாது என்றும், இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வரை நேரில் சந்திப்பது என்பது விஷப்பரீட்சை என்றும் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.<a title="ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/mk-stalin" data-type="interlinkingkeywords">ஸ்டாலின்</a> குறிப்பிட்டிருந்தார்.</p>
<p style="text-align: justify;">இந்நிலையில், அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துகள் குறித்தும், சந்திப்பின் பின்னர் ஏற்படப்போகும் விளைவுகள் பற்றியும் முதலமைச்சர் விஜயின் ஆலோசகர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது.</p>
<p style="text-align: justify;"><strong><em>முதல் பயணத்தில் இருக்கும் சிக்கல்கள் </em></strong></p>
<p style="text-align: justify;">அதே நேரத்தில், திட்டமிட்டப்படி முதல்வர் விஜய், கர்நாடகா சென்று அம்மாநில முதல்வர் டிகே சிவக்குமாரை காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நேரில் சந்தித்து பேசிய பின்னரும் கர்நாடகா அதே நிலைப்பாடில் இருந்தாலும், மேகதாது அணைக் கட்டுவதில் இருந்து பின்வாங்கும் முடிவை அறிவிக்காவிட்டாகும் முதல்வர் விஜய் எடுத்துள்ள இந்த முக்கியமான வியூகம் பலனிளிக்காமல் போய்விடும். அதே நேரத்தில், முதல்வர் விஜயின் முக்கியமான முதல் முன்னெடுப்பே தோல்வியில் சென்று முடிந்துவிடும். அதனால், காவிரி நீர் விவாகரம் தொடர்பான இந்த பயணத்தை தற்காலிகமாக தள்ளிப் போடவோ அல்லது நிரந்தரமாக ரத்து செய்யவோ முதல்வர் அலுவலகம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p style="text-align: justify;"><strong><em>விடாப்பிடியாக இருக்கும் கர்நாடகா</em></strong></p>
<p style="text-align: justify;">உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு என எதைப் பற்றியும் கவலைப்படாமல், தமிழ்நாட்டிற்க்கு தேவையான தண்ணீரை திறந்துவிடாமல் தொடர்ந்து விடாப்படியாக இருக்கிறது கர்நாடகா அரசு. இதனால், ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை கூட திறக்க முடியாத நிலை உருவாகி, டெல்டா விவசாயிகள் குறுவை விவசாயத்தை செய்ய முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. கர்நாடாகவில் வறட்சி நிலவுவதாக கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதமும் கூட தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்பதற்கான ஒரு வியூகம்தான் என்பதால், முதல்வர் விஜய் இந்த பயணத்தை மேற்கொள்ள கூடாது என்றும் சட்ட ரீதியாகவே கர்நாடாகவிடம் தமிழ்நாட்டிற்கான தண்ணீரை பெற வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;"><strong><em>முதல்வர் விஜயின் பயணத் திட்டம் தெரிந்து நடைபெறும் போராட்டம்</em></strong></p>
<p style="text-align: justify;">தமிழ்நாடு முதல்வர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>, வரும் 3ஆம் தேதி பெங்களூருக்கு அரசு முறை பயணமாக செல்வது அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியுள்ள நிலையில், கர்நாடக அரசியல் அமைப்புகளும், விவசாய சங்கங்களும் மேகாதாது அணையை கர்நாடகா அரசு உடனடியாக கட்ட வேண்டும் என்று போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கியிருக்கின்றன. நேற்று நடந்த போராட்டத்தில் கூட காலிக் கூடங்களுடன் கர்நாடக – தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் மேகதாது அணைக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியிருக்கின்றன. இதனால், தமிழ்நாட்டில் இருந்து அந்த மாநில எல்லைக்கு செல்லும் பேருந்துகளும் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>
<p style="text-align: justify;"> </p>
Source: Read Full Article