
<p>கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு கிட்டதட்ட 9 மாதங்கள் கழித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று அம்மாவட்டத்திற்கு செல்கிறார். இதனால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. </p>
<h2><strong>கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்</strong></h2>
<p>தமிழ்நாட்டின் முதலமைச்சரான ஜோசப் விஜய், தவெக தலைவராக கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள சென்றார். வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற இந்த பரப்புரையில் விஜயைக் காண மிக குறுகிய சாலை ஒன்றில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். விஜய் பேசி முடித்த சில நிமிடங்களில் கூட்ட நெரிசல் ஏற்படவே மூச்சுத்திணறி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கரூர் சம்பவம் தவெகவுக்கு கருப்பு புள்ளியாக அமைந்தது. இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. </p>
<p>தவெக தரப்பில் இந்த கூட்ட நெரிசலும், 41 பேரின் மரணமும் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதனிடையே மீண்டும் சென்னை திரும்ப திருச்சி வந்து கொண்டிருந்த விஜய் அன்றிரவு இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியடைந்தார். மீண்டும் கரூர் திரும்ப முடிவு செய்தபோது மேற்கொண்டு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் அனுமதி மறுத்தனர். அதன்பிறகு விஜய் கரூர் மாவட்டத்துக்கு செல்லவில்லை. 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, ஆறுதல் கூறினார். மேலும் தவெக தரப்பில் தேவையான நிவாரண உதவிகளையும் வழங்கினார். </p>
<p><iframe title="TVK MLA Saravanan |”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்" src="https://www.youtube.com/embed/ynL3NKvNqbI" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2><strong>முதலமைச்சராக விஜய் கரூர் பயணம்</strong></h2>
<p>இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் வென்று முதலமைச்சரான பிறகு விஜய் கரூர் செல்லாமல் இருப்பது மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. சரியாக 9 மாதங்கள் கழித்து விஜய் இன்று கரூர் மாவட்டம் செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் செல்லவுள்ளார். வழியெங்கும் விஜய்க்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளிக்க <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a>வினரும், பொதுமக்களும் முடிவு செய்துள்ளனர். </p>
<p>கரூர் - சேலம் பைபாஸ் சாலையில் உள்ள அட்லஸ் கலையரங்க வளாகத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்காக மிகப்பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு க்யூ ஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுள்ளது. இந்நிகழ்வில் கரூர் சோக சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரில் 32 பேர் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் தகுதியான அரசு வேலைக்கான பணி ஆணையை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் விஜய் வழங்கவுள்ளார். </p>
<p><strong>Also Read: <a title="Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு" href="https://tamil.abplive.com/news/tamil-nadu/minister-rajmohan-says-hereafter-no-one-other-than-those-necessary-shall-be-allowed-to-enter-school-campuses-266888" target="_blank" rel="noopener">Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு</a></strong></p>
<p>இதன்பின்னர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் அவர் பங்கேற்கிறார். மேலும் தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் ரூ.1700 கோடி மதிப்பீட்டிலான தொழிற்சாலைக்கு விஜய் அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> இன்றிரவு சென்னை திரும்புகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/business/do-you-know-why-do-atms-need-ac-266824" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article