
<h3 dir="ltr"><strong>ஆட்டோவை வழிமறித்த காவலர்கள்</strong></h3>
<p dir="ltr">நெல்லை டவுன் பாறையடி ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். ( எ ) மாரியப்பன் ( வயது 30 ) இவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். ஜூன் 28 தச்சநல்லூர் - டவுன் சாலையில் உள்ள குருநாதன் கோவில் திருப்பு முனை அருகே அவர் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது , அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரது ஆட்டோவை நிறுத்தி விசாரித்துள்ளனர்.</p>
<p dir="ltr">அவர் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக கூறி, மேலும் ஆட்டோவை இயக்க அனுமதிக்காமல் காவல் துறை தரப்பில் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த ஆட்டோ ஓட்டுநர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.</p>
<h3><strong>உயிரிழந்த ஓட்டுநரின் மனைவி கூறுகையில் ; </strong></h3>
<p>சவாரி ஏதுமின்றி காலியாக வந்த தனது கணவரின் வாகனத்தை மட்டும் காவலர்கள் திட்டமிட்டு மறித்துள்ளனர். மற்ற வாகனங்களை அனுமதித்து விட்டு என் வண்டியை மட்டும் ஏன் நிறுத்துகிறீர்கள் ? என்று கேள்வி எழுப்பியதால் கோபமடைந்த காவலர்கள், அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டி, சாதிய ரீதியாகவும் மிகக் கேவலமாக பேசி வன்முறையை ஏற்படுத்தியுள்ளார்.</p>
<p>மேலும் அவரது கைபேசியைப் பறித்து தரையில் போட்டு உடைத்ததுடன், வாகனத்தின் சாவியையும் பிடுங்கிக் கொண்டு சிறையில் அடைத்து விடுவதாக அச்சுறுத்தியுள்ளனர். காவல் துறையினரின் இந்தத் தாக்குதலாலும், பொது வெளியில் இழைக்கப்பட்ட சாதிய அவமானத்தாலும் எல்லையற்ற மன உளைச்சலுக்கு ஆளான ஓட்டுநர் ' என்னை விட்டு விடுங்கள், இல்லையென்றால் தீக்குளித்து இறந்து விடுவேன் என்று கதறியுள்ளார்.</p>
<p>அதற்கு அங்கிருந்த காவலர்கள் , கொளுத்திக் கொண்டு சாவு' என்று தற்கொலைக்குத் தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் விரக்தியடைந்த அவர், அங்கிருந்த ஒரு பெண் காவலர் உட்பட 6 காவலர்கள் முன்னிலையில் தன் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொண்டுள்ளார். அவர் உடலெங்கும் தீப்பற்றி எரிந்த கொடூரமான தருணத்தில், அங்கிருந்த காவலர்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர, உடனடியாகத் தீயை அணைக்க முற்படவில்லை என்று மனைவி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.</p>
<p>சுமார் 79 சதவீதத்திற்கும் மேலாக உடல் கருகிய நிலையில், அவர் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p>
<p>மறைந்த ஓட்டுநருக்கு 7 மற்றும் 8 வயதில் இரு குழந்தைகள் உள்ள நிலையில், குடும்பத்தின் ஒற்றை வாழ்வாதாரமாகத் திகழ்ந்த அவரது இழப்பு அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
Source: Read Full Article