
<p><strong>திருப்பத்தூர்:</strong> கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடல் நலக்குறைவால் குழந்தை உயிரிழந்தது. தவறான சிகிச்சை என பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.</p>
<p>திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த சுந்தரம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கலைவேந்தன் (வயது 30). இவரது மனைவி ஷாலினி (28). இவர்களுக்கு 11 மாதமான ரித்திக்ஷா என்ற பெண் குழந்தை இருந்தது. </p>
<p> </p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/E7xz25fQo20?si=Bxo8v55aPcfssxwT" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>இந்தநிலையில், கடந்த 2 நாட்களாக குழந்தை ரித்திக்ஷாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, குழந்தையை ஊத்தங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காததால், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். மருத்துவமனையில் குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தையை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்தனர்.</p>
<p>குழந்தையை பெற்றோர் கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, கந்திலி அருகே குழந்தை மயங்கி உள்ளது. இதையடுத்து பெற்றோர் குழந்தையை கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேரத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதை தாங்கமுடியாமல் பெற்றோர் கதறி அழுதது கண்கலங்கச் செய்தது.</p>
<p>இதனைத் தொடர்ந்து, குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மருத்துவமனையில் துரிதமாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி, ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து, கந்திலி போலீசார், சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.</p>
<p>இதையடுத்து, குழந்தையின் உறவினர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/yamaha-aerox-e-vs-tvs-x-which-is-top-in-mileage-which-is-best-in-price-266971" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article