
<p>சென்னை: தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் முற்றிலும் சட்டப்பூர்வமாகவும், தகுதியின் அடிப்படையிலும் நேர்மையாக நடைபெற்று வருகிறது என்ற அரசு தலைமை வழக்கறிஞரின் விளக்கத்தை ஏற்று, லஞ்சப் புகார் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. இதற்கிடையே, வழக்குப் போட்ட தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகியை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி த.வெ.க. தலைமை உத்தரவிட்டுள்ளது.</p>
<h2>ரூ.30 லட்சம் லஞ்சம்?</h2>
<p>தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் தற்காலிக அடிப்படையில் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.</p>
<p>இந்த நியமனங்களுக்கு த.வெ.க. நிர்வாகிகள் சிலர் ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெறுவதாகக் குற்றம்சாட்டி, த.வெ.க. வழக்கறிஞரணி இணைச் செயலாளரான விழுப்புரத்தைச் சேர்ந்த எம்.ஞானசவுந்தரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தமிழக முதல்வர் விஜய், அமைச்சர் ஆனந்த் ஆகியோரையும் எதிர்மனுதாரர்களாகச் சேர்த்திருந்தார்.</p>
<h2>விளம்பர மோகம்; நீதிபதி கண்டனம்</h2>
<p>இந்த வழக்கு நீதிபதி முகமது ஷபீக் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> நாராயண் ஆஜராகி, "அரசு வழக்கறிஞர்கள் நியமனம் முற்றிலும் தகுதியின் அடிப்படையில் நேர்மையாக நடக்கிறது. இதில் முதல்வர், அமைச்சர் பெயர்களை தேவையில்லாமல் சேர்த்துள்ளனர்" என்று வாதிட்டார்.</p>
<p>இதைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி குறுக்கிட்டு கூறியதாவது:-</p>
<p>"நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக (Headlines) வரவேண்டும் என்ற விளம்பர நோக்கத்திற்காகவே முதல்வர் மற்றும் அமைச்சரின் பெயர்களை இந்த வழக்கில் மனுதாரர் சேர்த்துள்ளார்.</p>
<p>இந்த நியமனத்தில் திமுக, அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக மனுதாரரே கூறியுள்ளார். இதிலிருந்தே இந்த நியமனங்கள் எந்த அளவுக்கு நியாயமாக நடக்கிறது என்பது தெளிவாகிறது."</p>
<p>இதையடுத்து, முதல்வர் மற்றும் அமைச்சரின் பெயர்களை வழக்கில் இருந்து நீக்க மனுதாரர் சம்மதித்தார். அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.</p>
<h2>பட்டியலில் பெயர் இல்லை!</h2>
<p>இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோதே, விழுப்புரம், வானூர், திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கான 20 பேர் கொண்ட அரசு வழக்கறிஞர்கள் இறுதிப் பட்டியல் வெளியானது. இதில் புகார் கொடுத்த ஞானசவுந்தரியின் பெயர் இடம்பெறவில்லை.</p>
<h2>ஞானசவுந்தரி அதிரடி நீக்கம்!</h2>
<p>நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, த.வெ.க. ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p>
<p>"ஆன்லைன் மூலம் கட்சியில் இணைந்த ஞானசவுந்தரி, எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி, கட்சியின் கொள்கை மற்றும் கட்டுப்பாட்டுக்கு முரணாகச் செயல்பட்டுள்ளார். எனவே, அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இனி அவருடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது."</p>
<p>இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டதும், த.வெ.க. பெண் நிர்வாகி அதிரடியாக நீக்கப்பட்டதும் வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>
Source: Read Full Article