
<p style="text-align: justify;"><strong>திருச்சிராப்பள்ளி:</strong> திருச்சி விமான நிலையத்தில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு தலைசிறந்த மைல்கல் ஆக இருக்கும் என்றும் அச்சுறுத்தும் வாகனங்களை நொடியில் முடக்கும் அதிநவீன பாதுகாப்பு அரண் மாறும் என்றும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.</p>
<p style="text-align: justify;">தென்னிந்தியாவின் முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாக விளங்கும் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் மற்றும் விமான நிலைய உள்கட்டமைப்பின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அதிநவீன பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் முக்கிய பகுதிகளுக்குள் அனுமதியின்றி அதிவேகமாக நுழைய முயலும் வாகனங்களை உடனடியாகத் தடுத்து, அவற்றை அங்கேயே முழுமையாக செயலிழக்கச் செய்யும் 'ஹோஸ்டைல் வெகிக்கிள் மிட்டிகேஷன்' (Hostile Vehicle Mitigation – HVM) பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக நிறுவப்பட்டு, விரைவில் முழுமையான பயன்பாட்டுக்கு வரவுள்ளது.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/09/9e6f9799d15939e4f73d560182ae44ca1783570385266733_original.jpg" /></p>
<p style="text-align: justify;">இந்த தொழில்நுட்பம் அறிமுகமாகியிருப்பது திருச்சி விமான நிலையத்தின் பாதுகாப்பு தரத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;"><strong>புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தல்</strong></p>
<p style="text-align: justify;">திருச்சி விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை மையமாகக் கொண்டு இந்த பாதுகாப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. உலகின் முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, தரைவழியாக ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முன்கூட்டியே தடுக்க உதவும் வகையில் செயல்படும்.</p>
<p style="text-align: justify;"><strong>₹72.27 லட்சம் மதிப்பில் நிறைவேற்றப்பட்ட திட்டம்</strong></p>
<p style="text-align: justify;">இந்த அதிநவீன பாதுகாப்புத் திட்டம் ₹72.27 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி விமான நிலைய இயக்குநர் ஜி. கோபாலகிருஷ்ணன் கூறுகையில், இந்த அமைப்புகள் அனைத்தும் நிறுவப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன. விரைவில் அவை திருச்சி மாநகர காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, தினசரி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;"><strong>இரண்டு அடுக்கு பாதுகாப்பு... எப்படி செயல்படும்?</strong></p>
<p style="text-align: justify;">இந்த புதிய பாதுகாப்பு அமைப்பில் இரண்டு முக்கிய தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.</p>
<p style="text-align: justify;">1. எலக்ட்ரோ-ஹைட்ராலிக் ரோடு பிளாக்கர் (Road Blocker)</p>
<p style="text-align: justify;">விமான நிலையத்தின் நுழைவுப் பாதையில் வலுவூட்டப்பட்ட எஃகால் உருவாக்கப்பட்ட எலக்ட்ரோ-ஹைட்ராலிக் ரோடு பிளாக்கர் பொருத்தப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இது சாதாரண தடுப்புக் கம்பம் அல்ல. கனரக லாரி அல்லது வேகமாக வரும் எஸ்யூவி போன்ற வாகனங்கள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றாலும், சில வினாடிகளில் தரையிலிருந்து உயர்ந்து இரும்புச் சுவர் போல மாறி, அந்த வாகனத்தை அங்கேயே நிறுத்தி செயலிழக்கச் செய்யும் திறன் கொண்டது.</p>
<p style="text-align: justify;">2. டயர் கில்லர் (Tyre Killer) தொழில்நுட்பம்</p>
<p style="text-align: justify;">வெளியேறும் பாதையில் எலக்ட்ரோ-ஹைட்ராலிக் டயர் கில்லர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. அனுமதியின்றி தவறான வழியில் வாகனம் நுழைய முயன்றால், தரையிலிருந்து கூர்மையான எஃகு முட்கள் தானாகவே மேலே எழுந்து, வாகனத்தின் டயர்களை உடனடியாக கிழித்து பஞ்சர் செய்துவிடும். இதனால் அந்த வாகனம் சில மீட்டர்கள் கூட நகர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, பாதுகாப்பு அச்சுறுத்தல் முற்றிலும் தடுக்கப்படும்.</p>
<p style="text-align: justify;"><strong>சாதாரண நேரங்களில் தெரியாத பாதுகாப்பு</strong></p>
<p style="text-align: justify;">இந்த இரண்டு அமைப்புகளும் சாதாரண நேரங்களில் சாலையின் அடிப்பகுதியில் மறைந்தே இருக்கும். இதனால் பயணிகள் மற்றும் அதிகாரப்பூர்வ வாகனங்களின் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படாது.</p>
<p style="text-align: justify;">ஆனால் அவசரநிலை அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால், கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு பட்டனை அழுத்தினால் போதும். சில வினாடிகளில் இந்த அமைப்புகள் மேலே எழுந்து பாதுகாப்பு அரணாக மாறிவிடும்.</p>
<p style="text-align: justify;"><strong>எங்கு பொருத்தப்பட்டுள்ளது?</strong></p>
<p style="text-align: justify;">பாதுகாப்பு நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் இந்த அமைப்புகள் மிகத் துல்லியமாக நிறுவப்பட்டுள்ளன. நுழைவுப் பாதை: விமான நிலைய சுங்கச் சாவடியில் இருந்து சுமார் 210 மீட்டர் தொலைவில் ரோடு பிளாக்கர்.<br />வெளியேறும் பாதை: சுமார் 190 மீட்டர் தொலைவில் டயர் கில்லர் அமைப்பு. இந்த இடங்கள் பாதுகாப்பு ரீதியாக மிக முக்கியமானவை என்பதால், அச்சுறுத்தலை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;"><strong>பயணிகளின் பாதுகாப்பே முதன்மை</strong></p>
<p style="text-align: justify;">சர்வதேச விமான நிலையங்களில் பாதுகாப்பு தரநிலைகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், திருச்சி விமான நிலையத்தில் இந்த நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பு மூலம் பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் வாகனங்கள் மூலம் ஏற்படக்கூடிய தீவிரவாத தாக்குதல்கள் அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் இருந்து கூடுதல் பாதுகாப்பைப் பெறுவார்கள் என்று விமான நிலைய நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. </p>
Source: Read Full Article