
<p>புதுச்சேரி : புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டு வருகின்றது.</p>
<p>புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, விவசாயிகளின் தகவல் திரட்டினை, வேளாண் இணையத்தள அடுக்கு திட்டத்தின் கீழ் தலைமைச் செயலகத்தின் வேளாண்மை பிரிவின் 21-08-2023 தேதியிட்ட அரசு ஆணை எண் 10ல் வகுத்துள்ள விதிகளின் படி, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளின் தகவல்களையும் கணினி மயமாக்கி விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கி அதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாக மானியங்களும் பிற சேவைகளும் இணையத்தளம் மூலமாக பதிவு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வெளிப்படையாகவும் சிரமமின்றியும் வழங்கப்படுவது அனைத்து விவசாய பெருமக்களும் அறிந்ததே.</p>
<p>அதனைத் தொடர்ந்து நபார்டு வங்கியின் வேளாண்மை பிரிவு மேம்பாட்டு நிதி உதவியுடன் வேளாண் துறையின் விவசாயிகளின் இணையத்தள பதிவேட்டில் பதிவு செய்தவர்களுக்கு கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பரீட்சார்த்த முறையில் க்யூ ஆர் குறியீடு (QR Code) அடங்கிய ஸ்மார்ட் - விவசாய அடையாள அட்டை, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, அதன் பின்னர், தகுதியுள்ள பதினான்காயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கும், க்யூ ஆர் குறியீடு (QR Code) அடங்கிய ஸ்மார்ட் - விவசாய அடையாள அட்டைகள் வழங்கிட தயார் செய்யப்பட்டு, அதனை கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி பி.எஸ். பாளையம் கிராமத்தில் மக்கள் நல வாழ்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற விவசாயிகள் சந்திப்பில் மாண்புமிகு துணைநிலை ஆளுநர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மற்ற விவசாயிகளுக்கும் அவர்கள் சார்ந்த உழவர் உதவியகங்கள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது.</p>
<p>மேலும், விடுபட்ட தகுதியுள்ள விவசாயிகள், அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஏதுவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் புகைப்படம் எடுக்கும் முகாம் நடத்தப்பட்டு அவர்களுக்கும் ஸ்மார்ட் - விவசாய அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. புகைப்படம் எடுக்கும் முகாம் பற்றிய விபரங்கள், விடுபட்ட விவசாயிகளுக்கு, குறுந்தகவல் மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், இந்த ஸ்மார்ட் - விவசாய அடையாள அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு புதுச்சேரி பகுதியில் செயல்படும் தேசிய வங்கிகளின் கிளைகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் புதுச்சேரி கிராம வங்கிக்கிளைகள் மூலம் பருவகால பயிர்க்கடன் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளன.</p>
<p>பருவக்கால் பயிர்க்கடன் பெற விரும்பும் ஸ்மார்ட் - விவசாய அடையாள அட்டை கொண்ட விவசாயிகள் அந்த பருவத்திற்குண்டான சாகுபடி விபரத்தினை முதலில் அவர்கள் சார்ந்த உழவர் உதவியகத்தில் பதிவு செய்து கொள்ளுதல் அவசியம். அந்த பதிவு, வேளாண் துறையின் மூலம் வழங்கப்படும் பயிர் உற்பத்தி ஊக்கத்தொகைக்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அவ்வாறு செய்யும் பொழுது அவர்கள் நடவு செய்ததற்கான தகவல் அந்தந்த வங்கிகள் பார்த்துக் கொள்ள வசதியாக, வேளாண் துறையின் இணையத்தளத்தில் உருவாக்கப்பட்டு அதனை வங்கிகள் மற்ற கடன் பெறும் தகுதிகளை சரி பார்த்து பருவகால பயிர் கடன்கள் வழங்கிட பரிசீலிக்கும். பருவ கால பயிர்க்கடன் பெற விரும்பாத விவசாயிகள் பயிர் உற்பத்தி ஊக்கத்தொகை பெற வழக்கம் போல் பதிவு செய்துகொள்ளுதல் வேண்டும்.</p>
<p>ஏற்கனவே இணையத்தளம் மூலம் வழங்கப்படும் பயிர் உற்பத்தி ஊக்கத்தொகை திட்டத்தில், ஒவ்வொரு கட்டத்திலும் விவசாயிகளின் விண்ணப்பங்கள் அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில், ஒரு குறுந்தகவல் அனுப்பப்படுகின்றது என்பது அனைத்து விவசாய பெருமக்களும் அறிந்ததே. அடுத்த கட்டமாக இனி வரும் காலங்களில், இணையத்தளம் மூலம் வழங்கப்படும் வேளாண் இடுபொருட்கள் அனுமதி சீட்டு மேலும் கணினி மயமாக்கப்பட்டு குறுந்தகவல் மூலமாக அனுப்பிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து விவசாய பெருமக்களும் இணையத்தள பதிவேட்டில் தங்களின் கைப்பேசி எண்களை அவசியம் உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p>
Source: Read Full Article