
<h2 dir="ltr"><strong>திருமணம் மீறிய உறவு </strong></h2>
<p dir="ltr">திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பூவரசன் என்பவர் கோயம்பத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் பகுதியில் இயங்கி வரும் ராஜா என்பவருக்குச் சொந்தமான பேக்கரியில் தங்கி வேலை செய்து வந்தார்.</p>
<p>இந்த நிலையில், பேக்கரி உரிமையாளர் ராஜாவின் மனைவி சுதா அடிக்கடி பேக்கரிக்கு வந்து கணவனுக்கு உதவி செய்து வந்த நிலையில் அவருக்கு பூவரசனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி, இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.</p>
<p>நாளடைவில் இந்த விவகாரம் குறித்து அறிந்த பேக்கரி உரிமையாளர் ராஜா, பூவரசனை கண்டித்து, இனி பேக்கரியில் வேலை செய்ய வேண்டாம் என கூறி அங்கிருந்து அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சில மாதங்கள் அந்த பகுதியை விட்டு வெளியேறிய பூவரசன், வேறு பகுதியில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.</p>
<h2><strong>மகன்களுடன் ஏற்பட்ட கைகலப்பு</strong></h2>
<p>பின்னர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மீண்டும் பொள்ளாச்சி பேக்கரிக்கு சென்று சுதாவிடம் பேச முயற்சித்ததாக தெரிகிறது. அப்போது பேக்கரியில் இருந்த ராஜாவின் மகன்கள் பூவரசனை பார்த்து அதிர்ச்சியடைந்து அவரை நண்பர்களுடன் சேர்ந்து கண்டித்திருக்கின்றனர்.</p>
<p>இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாறிய நிலையில், அங்கிருந்தவர்கள் பூவரசனை தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பூவரசன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.</p>
<p>அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயன்ற போதும் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசார், பூவரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p>
<h2><strong>மகன்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை</strong></h2>
<p>இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் , பேக்கரி உரிமையாளர் ராஜாவின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் என பள்ளி சிறுவர்கள் மற்றும் கல்லூரி மாணவர் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
<p>தாயுடன் கள்ள தொடர்பில் இருந்த நபரை மகன்கள் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது</p>
Source: Read Full Article