
<p>தருமபுரி அருகே தனது லாரியில் இருந்து டீசல் திருட்டில் ஈடுபட்ட ஊழியரை உரிமையாளர் காரில் பின் தொடர்ந்து சென்று கையும் களவுமாக பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p>
<h2>தொடரும் டீசல் திருட்டு சம்பவங்கள்</h2>
<p>எரிபொருள் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில் அதனை நம்பி தங்களது வியாபாரத்தை அமைத்திருக்கும் வணிகர்களும் மிகப்பெரிய அளவில் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதேசமயம் இத்தகைய வணிக வாகனங்களை இயக்குபவர்களில் சிலர் டீசல் திருட்டில் ஈடுபடும் சம்பவம் சமீபகாலமாக அதிகளவில் நடந்து வருகிறது. அப்படி ஒரு நிகழ்வு தான் தருமபுரி அருகே நடந்துள்ளது. </p>
<p>ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி பகுதியில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் 100க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களை இந்தியா முழுவதும் பல வகையான வணிக தேவைகளுக்கும் இயக்கி வருகிறார். இப்படியான நிலையில் கடந்த சில மாதங்களாகவே சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி வழியாக செல்லும் லாரிகளில் மட்டும் டீசல் அளவு மிக வேகமாக குறைவதை அவர் கண்டறிந்துள்ளார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களிடம் விசாரித்துள்ளார். அதற்கு டீசலுக்கு மைலேஜ் 2 கிலோ மீட்டர் குறைவாக கிடைக்கிறது என தெரிவித்துள்ளனர். ஆனால் புது லாரிகளில் டீசல் லிட்டருக்கு 5 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என்ற நிலையில் சோமசுந்தரத்திற்கு சந்தேகம் வலுத்தது. </p>
<p><iframe title="Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்" src="https://www.youtube.com/embed/9_OsS17Ut6c" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2><strong>காரில் பின்தொடர்ந்த லாரி உரிமையாளர்</strong></h2>
<p>இதற்கிடையில் தருமபுரி, கிருஷ்ணகிரி வழியாக செல்லும் லாரிகளில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவிகளை அவர் ஆய்வு செய்தார். இதில் தருமபுரிக்கும் கிருஷ்ணகிரிக்கும் இடைப்பட்ட பகுதியில் லாரிகள் மணிக்கணக்கில் நின்று செல்வது தெரிய வந்தது. கடந்த மே மாதம் முதலே டீசல் அளவு குறைவது தொடர்கதையாகி வந்த நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் சோமசுந்தரம் குழம்பினார். இருந்தாலும் என்ன நடந்தது என்பதை கண்டறிய அவர் ஒரு முடிவு செய்தார். </p>
<p>அதன்படி நேற்று காலை தேங்காய் எண்ணெய் ஏற்றிய லாரி ஒன்று தருமபுரி வழியாக பயணித்தது. லாரி புறப்பட்டவுடன் சிறிது நேரத்தில் சோமசுந்தரம் அந்த ஓட்டுநருக்கு தெரியாமல் மற்றொரு காரில் வீடியோ எடுப்பவர் ஒருவருடன் பின்தொடர்ந்து சென்றுள்ளார். சரியாக பெரியாம்பட்டி மேம்பாலம் அருகே லாரி நின்றுள்ளது. இதனால் காரை சிறிது தூரம் தள்ளி நிறுத்தி விட்டு சோமசுந்தரம் அங்கு என்ன நடக்கிறது என்பதை கவனித்தார். </p>
<p>அப்போது அருகில் இருந்த குடிசை வீட்டில் இருந்து ஒருவர் தன் ஓட்டுநருடன் வருவதையும், அவர் கையில் டீசல் கேன், வாகனங்களில் எரிபொருளை உறிஞ்சு எடுக்கும் ட்யூப் ஆகியவை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த நபர் சர்வ சாதாரணமாக தன் லாரி ஓட்டுநருடன் வந்து டீசல் டேங்கை திறந்து தன் கேனில் நிரப்பிக் கொண்டிருந்தார். </p>
<p><strong>Also Read: <a title="Jananayagan: ஜனநாயகன் படத்தை தப்பா சொல்லணும்.. திமுக தரப்பில் பணப்பேரம்?.. வெளியான ஸ்க்ரீன்ஷாட்!" href="https://tamil.abplive.com/entertainment/dmk-gen-z-page-approach-some-influencers-regarding-given-fake-reviews-for-cm-joseph-vijay-jananayagan-movie-267162" target="_blank" rel="noopener">Jananayagan: ஜனநாயகன் படத்தை தப்பா சொல்லணும்.. திமுக தரப்பில் பணப்பேரம்?.. வெளியான ஸ்க்ரீன்ஷாட்!</a></strong></p>
<p>இதனால் கடும் கோபமடைந்த சோமசுந்தரம் வீடியோ எடுத்தவாறு தன் லாரி ஓட்டுநர் அரவிந்தனையும், டீசல் திருடிய நபரையும் கையும் களவுமாக பிடித்தார். இதனால் அரவிந்தன் தான் இப்படி வசமாக மாட்டிக்கொண்டோமே என பதறிப்போனார். ஆனால் டீசல் திருடிய நபர், உங்கள் ஓட்டுநர் போன் செய்த பிறகு தான் நான் இங்கு வந்தேன் என சொல்லியுள்ளார். மேலும் பேசிக்கொண்டிருக்கையிலே அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து லாரி ஓட்டுநர் அரவிந்தன், டீசல் திருடிய நபர் மீது காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/health-tips-what-happens-if-you-eat-ghee-smeared-roti-267333" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article