
<p>தமிழ்நாட்டில் ஒரு வார காலத்திற்கு கோழி இறைச்சி விற்பனையை நிறுத்தி வைக்க கோழி வணிகர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இந்த செய்தி அசைவ பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p>
<p>தஞ்சாவூரில் கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் கோழிகள் விற்பனைக்கு வருவதற்கு மிக நெருக்கமான நேரத்தில் பண்ணையாளர்கள் தீவனம் வழங்குகிறார்கள். இதனால் அவற்றின் எடை செயற்கையாக அதிகமாக காட்டப்படுகிறது. எனவே கோழிகள் விற்பனைக்கு வருவதற்கு 15 மணி நேரம் முன்னதாகவே தீவனம் வழங்குவதை கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி கட்டத்தில் உணவு வழங்குவது சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு எடை ஏமாற்றும் செயலாகவும் பார்க்கப்படுகிறது. </p>
<p><iframe title="Modi in New Zealand | நியூசிலாந்தில் பிரதமர் மோடி! 'ஹாகா' நடனம் ஆடி வரவேற்பு! வைரலாகும் வீடியோ!" src="https://www.youtube.com/embed/_xreMBYRIAY" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>அதுமட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் ஆபத்தும் தேவையில்லாமல் இருக்கிறது. ஆகவே இந்த தீவனம் வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்பதை ஒரு கட்டாய வழிகாட்டு நெறிமுறையாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். இதனை சட்டமாகவும் மாற்ற வேண்டுமென கோழி வணிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். </p>
<p>அந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மண்டல, மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும். ஒருவேளை இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வணிகர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ஒரு வார காலத்திற்கு தமிழ்நாடு முழுவதும் கோழி விற்பனையை முழுமையாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இனிவரும் காலங்களில் வள்ளலார் தினம், மகாவீரர் ஜெயந்தி நாட்களில் இறைச்சி விற்பனை தடை செய்வதை நிறுத்தி அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. </p>
<p>இந்த கூட்டத்தில் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோழி வணிகர்கள் கலந்து கொண்டனர். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் அரசுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளதால் இறைச்சி பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். </p>
<p><strong>Also Read: <a title="TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?" href="https://tamil.abplive.com/news/tamil-nadu/tvk-it-wing-warning-to-dmk-people-will-cast-you-very-far-away-267142" target="_self">TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?</a></strong></p>
<p>இறைச்சிகளில் சிக்கன் என அழைக்கப்படும் கோழி மிக குறைவான விலையில் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. கறிக்கோழி, முட்டைக்கோழி, நாட்டுக் கோழி என 3 வகைகளில் இவை வளர்க்கப்பட்டு உணவுக்காக விற்பனை செய்யப்படுகிறது. நாட்டுக்கோழி விலை சற்று அதிகமாக இருந்தாலும் அதில் அதிக சத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. குறைந்தபட்சம் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையில் கோழி இறைச்சி விற்பனை கடைகளில் கூட்டம் அலைமோதும். தற்போது தோல் உரிக்கப்பட்ட கோழி ஒரு கிலோ ரூ.370 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒருவேளை சிக்கன் விற்பனை நிறுத்தப்பட்டால் மக்கள் மட்டன், கடல் உணவுகள், பீஃப் போன்ற மாற்று வழிகளை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/health-tips-does-wearing-tight-underwear-reduce-sperm-count-267061" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article