
<p>தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தாலும் கர்நாடக அரசு காவிரி நீர் பங்கீட்டிற்கு எப்போதும் முழுமையாக ஒத்துழைக்காமலே இருந்து வருகிறது. நடப்பாண்டிற்கான காவிரி நீர் பங்கீட்டிலும் கர்நாடக அரசு இதுவரை தமிழகத்திற்கான பங்களிப்பை வழங்கவில்லை. இதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p>
<p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, </p>
<h2><strong>இன்னும் வராத காவிரி நீர்:</strong></h2>
<p>தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 TMC தண்ணீருக்கு பதில் 2.91 TMC நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஜூலை மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 TMC நீர். </p>
<p>20 நாட்களில் சுமார் 21 TMC தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு காவிரியில் ஜூன் மாதம் திறக்க வேண்டிய சுமார் 6.28 TMC நிலுவை தண்ணீரையும், ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய பங்கு நீரையும் இன்றுவரை முழுமையாகத் திறந்துவிடவில்லை என்று செய்திகள் வந்துள்ளன. </p>
<h2>வறட்டுப் பிடிவாதம்:</h2>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 TMC தண்ணீருக்கு பதில் 2.91 TMC நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஜூலை மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 TMC நீர். 20 நாட்களில் சுமார் 21 TMC தண்ணீரை… <a href="https://t.co/aM8Eo1pmS8">pic.twitter.com/aM8Eo1pmS8</a></p>
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) <a href="https://x.com/EPSTamilNadu/status/2079155787851817114?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote>
<p>
<script src="https://platform.x.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<p>இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் கர்நாடக அணைகளில் நீர் நிரம்பிய பிறகுதான் தமிழகத்திற்கு உரிய பங்கு நீர் வழங்கப்படும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு பேசியுள்ளதாக நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இதைக் கேட்கும்போது, 'கடலில் அலை எப்போது ஓய்வது, நாம் எப்போது குளிப்பது ? என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது. </p>
<p>கர்நாடக அணைகளில் குறிப்பிட்ட அளவு நீர் நிரம்பினாலே திறந்துவிட வேண்டும் என்பதுதான் வழிகாட்டு நெறிமுறைகள். ஆனால், அணைகள் முழுவதும் நிரம்பினால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடுவோம் என்பது ஒரு மோசடித்தனமான வறட்டுப் பிடிவாதமாகும்.</p>
<h2><strong>கர்நாடக முதலமைச்சருக்கு கண்டனம்:</strong></h2>
<p>உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமலும், அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராகவும், சர்வாதிகாரி போல் நடப்பது ஒரு மாநில முதலமைச்சருக்கு அழகல்ல. பல ஆண்டுகளாக வழக்குகள் நடைபெற்று, காவிரி நதிநீர் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதை மதிக்காத கர்நாடக முதலமைச்சருக்கு, தமிழக மக்களின் சார்பாக எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p>
<p>இம்மாதம் 22-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இக்கூட்டத்தில் கர்நாடக அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாகப் பெற உறுதியான அழுத்தம் தர வேண்டும் என்று பொய்க்கால் குதிரை த.வெ.க. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.</p>
<p>இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். </p>
Source: Read Full Article