
<p style="text-align: justify;">திருச்சி: திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலி கடித்ததாகக் கூறப்படும் சம்பவம் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் அரசு மருத்துவமனைகளின் சுகாதார பராமரிப்பு மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.</p>
<p style="text-align: justify;">திருச்சி மாவட்டம், கல்கண்டார்கோட்டை அருகே உள்ள ஆலந்தூரைச் சேர்ந்த தமிழ்க்கொடி (68) என்பவர், வீட்டில் ஏற்பட்ட விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.</p>
<p style="text-align: justify;"><strong>மூதாட்டியின் கால் விரலை பதம் பார்த்த எலி</strong></p>
<p style="text-align: justify;">இந்த நிலையில், நேற்று ஜூலை 22-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் வார்டில் உறங்கிக் கொண்டிருந்த தமிழ்க்கொடியின் காலில் கட்டு போடப்பட்டிருந்த நிலையில், அவரது கால் விரலை எலி கடித்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மூதாட்டி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், முதலில் எலி கடித்ததை அவர் உணரவில்லை என்றும், பின்னர் காலில் ரத்தக்கசிவு இருப்பதை கவனித்த உறவினர்கள் உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">தகவல் கிடைத்ததும் மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து மூதாட்டியை பரிசோதித்தனர். தொடர்ந்து காயத்திற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், எலி கடித்ததால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.</p>
<p style="text-align: justify;"><strong>உறவினர்கள் வேதனை</strong></p>
<p style="text-align: justify;">இந்தச் சம்பவம் குறித்து தமிழ்க்கொடியின் மகன் கூறுகையில், "எனது தாய் சர்க்கரை நோயாளி. அறுவை சிகிச்சைக்குப் பிறகு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், எலி அவரது கட்டை விரலை கடித்துள்ளது. உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தாலும், இதுபோன்ற சம்பவம் அரசு மருத்துவமனையில் நடக்கக் கூடாது. மருத்துவமனை வளாகம் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம். நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மருத்துவமனை நிர்வாகம் முழுப் பொறுப்பேற்று உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.</p>
<p style="text-align: justify;"><strong>நோயாளிகள் மத்தியில் அச்சம்</strong></p>
<p style="text-align: justify;">இந்தச் சம்பவம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்ற நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மத்தியில் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் வார்டுகளில் எலிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் சுகாதார பராமரிப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், எலி மற்றும் பூச்சி ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;"><strong>அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை</strong></p>
<p style="text-align: justify;">இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், திருச்சி அரசு தலைமை மருத்துவமனை நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறதா, எலி கடித்ததாகக் கூறப்படும் புகாரில் உண்மை நிலை என்ன என்பது குறித்தும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.</p>
<p style="text-align: justify;">எனினும், இந்தச் சம்பவம் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதுகாப்பு, சுகாதார பராமரிப்பு, தூய்மை மற்றும் எலி ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து மீண்டும் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ விசாரணைக்குப் பிறகு உண்மை நிலை மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
Source: Read Full Article