
<p style="text-align: justify;"><strong>தஞ்சாவூர்:</strong> "வீட்டை விட்டு வெளியே போகணுமா... இல்லையா?" என்று கடந்த சில நாட்களாக தஞ்சாவூர் மக்கள் தினமும் யோசிக்க வைத்தது வெயில். காலை 8 மணிக்கே சூரியன், "இன்று என்னுடைய முழு திறமையையும் காட்டப் போகிறேன்" என்ற முடிவோடு உதித்தது போல இருந்தது.</p>
<p style="text-align: justify;">மதியம் ஆனாலே சாலைகள் வெறிச்சோடி, டீக்கடைகளில் கூட, "டீ வேணாம்... ஒரு கூல்டிரிங்க்ஸ் பாட்டில் குடுங்க!" என்ற கோரிக்கையே அதிகமாக இருந்தது. வெளியே சென்றவர்கள் எல்லாம் ஒரே டயலாக்...</p>
<p style="text-align: justify;">"இது தஞ்சாவூரா... இல்ல சூரியனோட கிளை அலுவலகமா?" அந்த அளவுக்கு வெயில் மக்களை வாட்டி வதைத்தது. ஜூஸ் கடைகளில் மக்கள் தலைகள் அதிகம் தென்பட்டது. முக்கியமாக கரும்புகள் மிஷின்களில் அதிகம் பிழியப்பட்டன. </p>
<p style="text-align: justify;">ஆனால்... ஹாய் நண்பா நான் இருக்கேன். கவலைப்படாதீங்க என்று இன்று பிற்பகல் திடீரென வானம் தனது மனதை மாற்றிக் கொண்டது. வெள்ளை மேகங்கள் மெதுவாக கருமேகங்களாக மாறின. சில நிமிடங்களில் சாரல்... அதன்பிறகு சற்று பலமாக மழை... அதன் பின்னர் குளிர்ந்த காற்று... அவ்வளவுதான்!</p>
<p style="text-align: justify;">கடந்த சில நாட்களாக மக்களை வாட்டிய வெயில், "சரி... நான் கிளம்புறேன்!" என்று விடைபெற்றது போல மழை தஞ்சாவூரை முழுவதும் குளிர்வித்தது.</p>
<p style="text-align: justify;">மழைத்துளிகள் மண்ணில் விழுந்தவுடன் எழுந்த மண்வாசனை, பலருக்கு சிறுவயது நினைவுகளை மீட்டுக் கொடுத்தது. மனதிற்குள் இனிய இசையின் நாதமும் ஒலித்து இருக்கும் என்றால் மிகையில்லை. வீட்டின் வாசலில் நின்று மழையை ரசித்தவர்கள் ஏராளம். சிலர் கைபேசியை எடுத்து வீடியோ எடுத்தனர். இன்னும் சிலர், "இதை ஸ்டேட்டஸ்ல போடலாமே!" என்று உடனே சமூக வலைதளங்களில் பதிவேற்றத் தொடங்கிவிட்டனர்.</p>
<p style="text-align: justify;">சிறுவர்கள் குடைகளை மறந்து மழையில் குதூகலமாக ஓடினர். பெரியவர்கள், "சளி பிடிச்சிடும்... உள்ளே வாங்க!" என்று அழைத்தாலும், அந்த அழைப்பை யார் கேட்கிறார்கள்? கொளுத்திய வெயில் அப்படி. </p>
<p style="text-align: justify;">மழையுடன் சேர்ந்து வீசிய குளிர்ந்த காற்று, ஏசி இல்லாத வீடுகளிலும் கூட இயற்கை ஏசியை ஆன் செய்தது போல இருந்தது. பல நாட்களாக வெப்பத்தால் தவித்திருந்த மக்கள் மாலையில் வீட்டின் முன்பு அமர்ந்து குளிர்ந்த காற்றை ரசித்தனர்.</p>
<p style="text-align: justify;">விவசாயிகளுக்கும் இந்த மழை நம்பிக்கையை விதைத்துள்ளது. வயல்களில் ஈரப்பதம் அதிகரிக்கும் என்பதால் அடுத்த கட்ட விவசாயப் பணிகளுக்கு இது உதவியாக இருக்கும் என்று அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பட்பட்டென்று தெறித்து விழுந்த மழையால் இருசக்கர வாகனம் ஓட்டுவதில் சிரமம் ஏற்பட்டாலும் மக்கள் மழையை ரசித்து வரவேற்றனர். "வெயிலா... மழையா?" என்று கேட்டால் பெரும்பாலான மக்களின் பதில், "மழையே போதும்... வெயில் கொஞ்ச நாள் லீவ் எடுத்துக்கட்டும்!" என்பதாகவே இருந்தது.</p>
<p style="text-align: justify;">வானிலை ஆர்வலர்களின் தகவல்படி, வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த சில நாட்களும் இதமான வானிலை நீடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.</p>
<p style="text-align: justify;">மொத்தத்தில், கடந்த சில நாட்களாக "வெயிலில் வறுத்த தஞ்சாவூர்", இன்று "மழையில் குளித்த தஞ்சாவூர்" ஆக மாறியுள்ளது. இயற்கை கொடுத்த இந்த திடீர் சர்ப்ரைஸ், மக்களின் முகத்தில் சிரிப்பையும், மனதில் நிம்மதியையும் கொண்டு வந்துள்ளது. வெயிலால் வாடிய டெல்டாவுக்கு... மழை சொன்ன ஒரே வார்த்தை: "கவலைப்படாதீங்க... நான் வந்துட்டேன்!" என்பதாக இருக்குமோ. அப்படி இருந்து தொடர்ந்து மழை வருகைப்பதிவேடு கொடுத்தால் விவசாயிகள் மனம் குளிர்ந்து விடும். மழையே தொடர்ந்து வருவாயா..?</p>
Source: Read Full Article