
<p style="text-align: justify;"><strong>சென்னை: </strong>தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 16 கல்வி ஆண்டுகளாகத் தற்காலிகப் பணியாளர்களாகச் சேவை ஆற்றிவரும் 11,773 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையிலான ஆசிரியர் சங்கங்களின் கலந்தாய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் சங்கங்களுடனான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார், மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் சஞ்சய் காந்தி மற்றும் பாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டு பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை அமைச்சரிடம் மனுவாக அளித்து விரிவாகப் பேசினர்.</p>
<h3 style="text-align: justify;">சமவேலைக்கு சமஊதியம் மற்றும் பணி நிரந்தரம்</h3>
<p style="text-align: justify;">இதுகுறித்து பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் தெரிவித்ததாவது: "தமிழக அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்க்கைக்கலை ஆகிய சிறப்புப் பாடங்களில் மொத்தம் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறோம். கடந்த 16 கல்வி ஆண்டுகளாக மிகக் குறைந்த தொகுப்பூதியத்தில், தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் எங்களுக்கு பணிப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.</p>
<p style="text-align: justify;">ஐந்து ஆண்டுகள் தற்காலிகமாகப் பணியாற்றிய ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்ற தவெக வாக்குறுதியை முன்மாதிரியாகக் கொண்டு, 15 கல்வி ஆண்டுகளைக் கடந்து தொடர்ச்சியாகச் சேவை செய்துவரும் 11,773 பகுதிநேர ஆசிரியர்களையும் முன்னுரிமை அடிப்படையில் அரசு உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும், 'சமவேலைக்கு சமஊதியம்' என்ற நீதியான கோரிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று கூறினார்.</p>
<h3 style="text-align: justify;">புதிய தேர்வுகளைக் கைவிட்டு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தல்</h3>
<p style="text-align: justify;">ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய நியமனங்கள் குறித்தும் கூட்டமைப்பின் சார்பில் முக்கியக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தற்போது உடற்கல்வி ஆசிரியர் பிரிவில் உள்ள 1,328 காலிப்பணியிடங்களை TRB தேர்வு வாரியம் மூலம் புதிதாக நிரப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்புதிய தேர்வுகளை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக, அதே உடற்கல்விப் பாடத்தில் கடந்த 16 கல்வி ஆண்டுகளாகத் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் 3,843 பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களைக் கொண்டு அந்த இடங்களை நிரப்ப வேண்டும்.</p>
<p style="text-align: justify;">அதேபோன்று ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்க்கைக்கல்வி ஆகிய பாடங்களிலும் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரையும் முழுமையாகப் பணி நிரந்தரம் செய்த பிறகே, அப்பாடங்களுக்கான புதிய ஆசிரியர் நியமனங்களை அரசு தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.</p>
<h3 style="text-align: justify;">பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுகோள்</h3>
<p style="text-align: justify;">தற்போது பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் ரூ.15,000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 200 கோடி செலவாகிறது. ஏழாவது ஊதியக் குழுவின் புதிய ஊதிய நிலை 10-ன் படி (Pay Level 10), அடிப்படைச் சம்பளமாக ரூ. 20,600 நிர்ணயம் செய்து, அதனுடன் அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி மற்றும் மருத்துவப்படி ஆகியவற்றை உள்ளடக்கிய காலமுறை ஊதியமாக (Regular Time Scale) மாற்றி வழங்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">இத்தகைய காலமுறை ஊதியத்தை அமல்படுத்தினால் அரசுக்கு ஆண்டுக்குக் கூடுதலாகச் சுமார் ரூ. 300 கோடி மட்டுமே தேவைப்படும். எனவே, வரும் நிதிநிலை அறிக்கையில் (Budget) இதற்கான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து, 16 ஆண்டு காலப் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசு முன்வர வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்ளப்பட்டது.</p>
<p style="text-align: justify;">பகுதிநேர ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கைகளை கவனமாகச் செவிமடுத்த பள்ளிக்கல்வி அமைச்சர், இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப் பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.</p>
Source: Read Full Article