
<p style="text-align: justify;">பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம்.</p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/11/1b3baa5f6e7b6befe3abd3dcad0d1b741783763631640193_original.JPG" /></p>
<p style="text-align: justify;">சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">இந்த நிலையில், சபரிமலையில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசன் வருகிற நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. எனவே தரிசனத்திற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் அடிப்படை வசதிகளை திறம்பட செயல்படுத்த அந்தந்தத் துறை அதிகாரிகளுக்கு இப்போதே உத்தரவிடப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">குறிப்பாக சபரிமலையில் விடுதி அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஜெயக்குமார் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது சபரிமலையில் அனைத்து செயல்பாடுகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும். சபரிமலையில் விடுதி அறைகள் அனைத்தும் ஆன்லைன் முறைப்படி பக்தர்கள் முன்பதிவு செய்ய வசதி செய்யப்படும்.</p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/11/dc87d993e2d340fadbcdb543cbe6aacd1783763601451193_original.JPG" /></p>
<p style="text-align: justify;">தற்போது வரை 190 அறைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டு வந்தது. மேலும் கூடுதல் அறைகள் தயார் படுத்தப்படும். இனிமேல் அய்யப்ப சங்கமம் நடத்தப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.</p>
<p style="text-align: justify;">இதே நேரத்தில் மண்டல மகரவிளக்கு சீசன் தொடங்க இன்னும் 4 மாதங்கள் உள்ளன. கடந்த ஆண்டில் நடந்த தவறு, இந்த ஆண்டு நடைபெறாத வகையில் செயல்படுவது உறுதி செய்யப்படும்.சீசனில் பக்தர்களின் கூட்ட நெரிசல் மிகப்பெரிய பிரச்சினையாக ஒவ்வொரு ஆண்டும் இருந்து வருகிறது. இந்த ஆண்டு ஏ.ஐ. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்படும். அனைத்து பக்தர்களுக்கும் <a title="சபரிமலை" href="https://tamil.abplive.com/topic/sabarimala" data-type="interlinkingkeywords">சபரிமலை</a> தரிசனம் உறுதி செய்யப்பப்பட்டுள்ளது.</p>
Source: Read Full Article