
<p>தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது மட்டும் போதாது, பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று அமைச்சர் வன்னியரசு கூறியுள்ளார்.</p>
<p>நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லியில் மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்த வந்த நிலையில், தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். 35 நாட்களாக நடந்து வந்த போராட்டத்திற்கு தீர்வு கிடைத்தது. மாணவ, மாணவிகளும் போராட்டம் வெற்றி பெற்றதாக அறிவித்தனர். கரப்பான் பூச்சி கட்சியின் தலைமையில் நடந்த இந்தப்போராட்டம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அவர்களின் மேலும் 3 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதி செய்ததை அடுத்து, போராட்டம் வாபஸ் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.</p>
<p> </p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/B0rH5C_Umg0?si=eqn3plKWBCa03xOF" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>இந்த நிலையில், தர்மேந்திர பிரதான் பதவி விலகியதை வரவேற்று அமைச்சர் வன்னியரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘நீட் வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகளை எதிர்த்து தொடங்கிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம், நாடெங்கும் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்பாட்டுக்கு எதிரான ஒரு பேரலையாக எழுச்சி பெற்றது. கரப்பான் பூச்சிகள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் கிண்டலடிக்கப்பட்ட இளைஞர் படை, CJP அமைப்பாக மாறி இந்தியாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது.</p>
<p>இளைஞர்களின் சமரசமற்ற போராட்டத்தால் மத்திய பாஜக அரசு பணிந்தது. நீக்கவே முடியாது என்று சொல்லப்பட்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதுபோல தான் முன்னர் விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களில் ஒரு புள்ளியை கூட மாற்ற முடியாது என்றார்கள். ஆனால் நடந்தது என்னவென்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. மக்களுக்கு பதிலளிக்கவே முடியாது என்று சொல்லிக்கொண்டிருந்த பிரதமர் மோடி, இரவெல்லாம் தூக்கம் இழந்து இளைஞர்களுக்கு வீடியோ வெளியிட்டுக் கொண்டுள்ளார்.</p>
<p>நீட் தேர்வு சீரமைக்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் திரண்டிருந்தாலும், 10 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் நமது தங்கை அனிதா பற்ற வைத்திருந்த நீட் ஒழிப்பு எனும் முழக்கம் இன்று நாடு முழுவதும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. </p>
<p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/25/4fe8a4485b9e41fa873ac57b57a4488b1784986762137113_original.jpg" width="720" /></p>
<p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்காப்பியன் திருமாவளவன் நாடாளுமன்றத்தில் பேசும்போது, “தமிழ்நாட்டில் மட்டுல்ல; இந்தியா முழுமைக்கும் நீட் கூடாது”என வலியுறுத்தினார். மாணவர்கள் - இளைஞர்கள் இப்போது உண்மையை உணர தொடங்கியுள்ளனர். பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை சமூக மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைக்கும் நீட் தேர்வு ஒழிப்பே நிரந்தர தீர்வாக அமையும். அதன் முதல்படியாக கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.</p>
<p>வடஇந்திய மாணவர்கள் சொல்வது போல, அமைச்சர் பிரதானுடன் தொடங்கிய இந்த போராட்டம், பிரதான் மந்திரி மோடியை நீக்குவதில் தான் முடியும். இப்போதாவது, மோடி அரசு நீட்டை ரத்து செய்து மாணவர்களின் கடுங்கோபத்திற்கு ஆளாகாமல் தப்பித்துக்கொள்வது நல்லது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article