
<p>மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை திறக்க கோரிய வழக்கு முடித்து வைப்பு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்திரவிட்டு வழக்கு விசாரணை முடித்து வைத்தது உயர் நீதிமன்ற மதுரை அமர்வு.</p>
<p><strong>மதுரை காந்தி மியூசியம்</strong></p>
<p>மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவர் கதிர், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரை தமுக்கத்தில் செயல்பட்டு வரும் காந்தி அருங்காட்சியகம், பல ஆண்டுகளாக கல்வி, ஆய்வு, பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் வரலாற்றுப் பாரம்பரிய பாதுகாப்பிற்கான முக்கிய மையமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைப்புப் பணிகள் காரணமாக காந்தி நினைவு அருங்காட்சியகமும் அதன் நூலகமும் மூடப்பட்டிருக்கிறது. அருங்காட்சியகத்தை மீண்டும் திறப்பதாக அதிகாரிகள் பலமுறை உறுதியளித்த போதிலும், இதுவரை பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படாமல் இருப்பதுடன், திறப்பு தேதி குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. </p>
<p><strong>பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அரசுத் தரப்புக்கு உத்தரவிட வேண்டும் </strong></p>
<p>இவை திறக்கப்படாமல் இருப்பதால் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், போட்டித் தேர்வர்களும், சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை எடுத்துரைக்கும் முக்கிய பாரம்பரிய மையம் நீண்ட காலமாக செயல்படாமல் இருப்பது அதன் நோக்கத்தையே பாதிக்கிறது. எனவே, சீரமைப்புப் பணிகளை விரைந்து நிறைவு செய்து, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தையும் நூலகத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அரசுத் தரப்புக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.</p>
<p><strong>பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்திரவிட்டு வழக்கு விசாரணை முடித்து வைத்தனர்.</strong></p>
<p>இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அருங்காட்சியகம் தரப்பில், புனரமைப்பு பணிகள் முடிந்து விட்டது. டிஜிட்டல் திரை மட்டும் வைக்கப்பட வேண்டும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது, என தெரிவித்தார். நீதிபதிகள் உத்தரவில், புனர் அமைப்பு பணிகளை மேற்கொண்டதற்கு அருங்காட்சியக நிர்வாகிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். பணிகள் நிறைவடைந்த உடன், தேசப்பிதா மகாத்மா காந்தியின் கொள்கைகளை பொதுமக்கள் அனைவரும் அறியும் வண்ணம் காட்சிப்படுத்த வேண்டும். விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்திரவிட்டு வழக்கு விசாரணை முடித்து வைத்தனர் .<br /><br /></p>
Source: Read Full Article