
<p>அதிமுக என்ற கட்சி பிணவறையில் வைக்கும் அளவுக்கு மோசமான நிலைக்கு சென்று விட்டது என தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். </p>
<h2><strong>மாறிய தேமுதிக கூட்டணி</strong></h2>
<p>2006ம் ஆண்டு தேமுதிக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டது. 2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது. பின்னர் அந்த கூட்டணியில் விரிசல் விழ 2014 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக மத்தியில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தது. அதன்பின் 2016ல் மூன்றாம் அணியான மக்கள் நல கூட்டணிக்கு தலைமை வகித்தது. இதற்குப் பிறகு 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடனும், 2021ல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடனும் கூட்டணி வைத்தது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வந்த தேமுதிக 2026 சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் திமுக கூட்டணியில் இணைந்தது. </p>
<p><iframe title="Minister Vignesh | "எது புது BRAND வேணுமா.. சொல்லுங்க கொண்டு வந்திடலாம்" கலகலப்பாக பேசிய அமைச்சர்" src="https://www.youtube.com/embed/P3eQfZcjUp4" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>அக்கட்சிக்கு 10 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை எம்பி சீட்டும் ஒதுக்கப்பட்டது. இதில் மாநிலங்களவை எம்பியாக தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பொறுப்பேற்றார். 10 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக விருத்தாச்சலம் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா முதல்முறையாக எம்.எல்.ஏ. ஆனார். </p>
<h2><strong>நன்றி அறிவிப்பு கூட்டம்</strong></h2>
<p>இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி செயலாளர் பார்த்தசாரதி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.</p>
<p>அப்போது அவர் பேசுகையில், “அதிமுக இன்றைக்கும் இருக்கும் நிலைமையைப் பார்க்கும்போது அது ஐசியுவில் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் பிணவறைக்கு சென்று கொண்டிருக்கிறது. இனி எடப்பாடி பழனிசாமியை பிரேத பரிசோதனை தான் செய்ய வேண்டிய நிலைக்கு அவர் வந்து விட்டார். இனிமேல் அதிமுக தேறுவது சந்தேகம் தான். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொள்ளும் என கேப்டன் சொல்லுவார். 2016 ஆம் ஆண்டு எங்களுடைய தேமுதிக எம்.எல்.ஏ.வை எப்படியெல்லாம் விலைக்கு வாங்குனீர்கள். எங்களிடம் எவ்வளவு கோடி தருகிறேன் என்றெல்லாம் பேசுனீர்கள். நாங்கள் எல்லாம் தேமுதிகவின் உண்மையான தொண்டர்கள். தலைவர் விஜயகாந்த் இருந்தாலும், இப்போது இல்லாத சூழலில் பிரேமலதாவுடனும் இருக்கிறேன். இதுதான் உண்மையான தொண்டனுக்கு அழகு. எல்லாரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு போகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் எல்லாரும் போகிறார்கள். </p>
<p><strong>Also Read: <a href="https://tamil.abplive.com/news/tamil-nadu/tn-cm-vijay-inspects-egmore-childrens-hospital-tnn-266743" target="_blank" rel="noopener">" அரசு மருத்துவமனையில் பணம் கேட்டால் உடனே வேலை காலி " - பணம் கேட்டால் 104-ல் புகார் அளிக்கலாம்</a></strong></p>
<p>நான் விஜயைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க வேண்டும் என நினைக்கிறேன். மேடைக்கு மேடை திமுகவை தீய சக்தி என சொன்னீர்களே.. அதிமுகவை ஊழல் கட்சி என சொன்னீர்கள்.. இப்போது அதே ஊழல் செய்தவர்களை எல்லாம் மொத்தமாக தவெகவுக்குள் சேர்த்து கொள்கிறீர்களே.. அப்படியென்றால் நீங்களும் ஊழல் செய்யப் போகிறீர்கள் என்று தானே அர்த்தம்.. இதுதான் உண்மை. <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a>வுக்கு எதுவும் தெரியாது. அங்கு விவரம் தெரிந்தவர்கள் செங்கோட்டையனும், ஜேசிடி பிரபாகரனும் தான். அவர்களுக்கு ஊழல் செய்தால் எப்படி மாட்டாமல் இருக்கலாம் என்பது தெரியும் என தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/how-to-maintain-beautiful-and-healthy-nails-at-home-266712" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article