
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: தஞ்சாவூரின் பசுமையை மேலும் உயர்த்தும் வகையில் மதுரை ஆர்ஆர் இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் 8500 மரக்கன்றுகளை நட்டு சுற்றுப்புற சூழலை உயர்த்தும் உன்னத முயற்சியை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் வெகுவாக பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். </p>
<p style="text-align: justify;">தஞ்சாவூர் கோட்டத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் மதுரை ஆர்ஆர் இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தும் வகையில் மிகப்பெரிய மரக்கன்று நடும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு தொடங்கி 2026 பிப்ரவரி மாதம் வரை மொத்தம் 8,500 மரக்கன்றுகளை நட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p>
<p style="text-align: justify;">இதுவரை பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள நிலையில், அவற்றை நடுவதில் மட்டுமல்லாமல், அவை முழுமையாக வளர்ச்சி அடையும் வரை தொடர்ந்து பராமரிப்பதிலும் நிறுவனம் தனிப்பட்ட கவனம் செலுத்தி வருகிறது. மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல், களைகளை அகற்றுதல், பாதுகாப்பு வேலிகள் அமைத்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளும் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.</p>
<p style="text-align: justify;">தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலை ஓரங்கள், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்கள், பசுமை வளம் குறைந்த பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிழல் தரும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மரவகைகள் தேர்வு செய்யப்பட்டு நடப்பட்டு வருகின்றன. எதிர்கால தலைமுறைக்கு பசுமையான சூழலை உருவாக்க வேண்டும் என்ற சமூகப் பொறுப்புணர்வின் அடிப்படையிலேயே இந்த முயற்சியை நிறுவனம் மேற்கொண்டு வருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒரத்தநாடு பகுதியில் சாலை விரிவாக்கப்பணிகளை செம்மையாக நிறைவேற்றியுள்ள இந்நிறுவனம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து, வளர்த்து சத்தமில்லாத சாதனையை படைத்துள்ளது.</p>
<p style="text-align: justify;">மேலும் கரந்தை வடவாறு பாலம், தஞ்சாவூர் இர்வின் பாலம் ஆகியவற்றை மூன்றே மாதத்தில் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொடுத்து பாராட்டுக்களை பெற்ற நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் தாங்கள் மேற்கொள்ளும் சாலைப்பணிகள், பாலங்கள் அமைத்தல் போன்ற இடங்களில் மட்டுமின்றி பல்வேறு பகுதியிலும் மரக்கன்றுகளை வளர்த்து அசத்தி உள்ளனர். வல்லம் ஒரத்தநாடு சாலை, அரியலூர் பைபாஸ் சாலை, புதிய பேருந்து நிலையம் சாலை, மருத்துவக்கல்லூரி சாலை, புதுக்கோட்டை சாலை பகுதிகளில் மரக்கன்றுகள் வைத்து பராமரித்து மரமாக வளர்த்து மக்கள் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.<br /> <br />இன்றைய காலகட்டத்தில் நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் மற்றும் மரங்கள் வெட்டப்படுவது போன்ற காரணங்களால் பசுமை வளம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் விளைவாக வெப்பநிலை அதிகரிப்பு, மழைப்பொழிவு மாற்றம், காற்று மாசுபாடு, நிலத்தடி நீர் குறைதல் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் சிக்கல்கள் உருவாகியுள்ளன. இந்தப் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வாக மரக்கன்றுகள் நடுதல் மிகவும் அவசியமான ஒன்றாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதை செயல்பாட்டில் செய்து காட்டி பாராட்டுக்களை குவிக்கிறது மதுரை ஆர்ஆர் இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம்.</p>
<p style="text-align: justify;">மரங்கள் மனித வாழ்வின் அடிப்படை ஆதாரங்களில் ஒன்றாகும். அவை உயிர் வாழ்வதற்குத் தேவையான ஆக்சிஜனை வழங்குவதுடன், வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கின்றன. மேலும், வெப்பநிலையை கட்டுப்படுத்தி சுற்றுப்புறத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், மழைப்பொழிவை அதிகரிக்கவும், நிலத்தடி நீர் வளத்தை பாதுகாக்கவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.</p>
<p style="text-align: justify;">அதுமட்டுமல்லாமல், மரங்கள் பல்வேறு பறவைகள், விலங்குகள் மற்றும் உயிரினங்களுக்கு வாழ்விடமாக விளங்குகின்றன. சாலை ஓரங்களில் மரங்கள் வளர்க்கப்படுவதால் பயணிகளுக்கு நிழல் கிடைப்பதோடு, தூசி மற்றும் காற்று மாசுபாடும் குறைகிறது. கிராமப்புறங்களில் மரங்கள் மண் அரிப்பைத் தடுக்கவும், விவசாய நிலங்களின் வளத்தை பாதுகாக்கவும் பெரிதும் உதவுகின்றன.</p>
<p style="text-align: justify;">ஒரு மரத்தை நடுவது மட்டுமே போதுமானதல்ல; அது நன்கு வளர்ந்து பெரிய மரமாக மாறும் வரை பராமரிப்பதும் அதே அளவுக்கு முக்கியமானதாகும். இதனை உணர்ந்து மதுரை ஆர் ஆர் இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரித்து வருவது சமூகப் பொறுப்புணர்வின் சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">சுற்றுச்சூழலை பாதுகாப்பது அரசு மட்டுமல்ல, பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் என அனைவரின் பொறுப்பாகும். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றையாவது நட்டு, அதை வளர்க்கும் பணியில் ஈடுபட்டால், பசுமையான தமிழ்நாட்டையும் ஆரோக்கியமான எதிர்காலத்தையும் உருவாக்க முடியும். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் 8,500 மரக்கன்றுகளை நட்டுள்ள ஆர் ஆர் இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் இந்த பசுமை முயற்சி, பிற நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் முன்மாதிரியாக அமையும் என சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். </p>
Source: Read Full Article