
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: தமிழகத்தின் நெற்களஞ்சியமாக போற்றப்படும் காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர்ப்பற்றாக்குறை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. காவிரி நீர் வரத்து தாமதம், பருவமழை பொய்த்ததால் அதிகரிக்கும் நெருக்கடி. குறையும் நிலத்தடி நீர்மட்டம் ஆகியவற்றால் டெல்டா விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர்.</p>
<p style="text-align: justify;">மேட்டூர் அணையில் இருந்து போதிய அளவில் காவிரி நீர் திறக்கப்படாததும், தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்யாததும் காரணமாக, டெல்டா முழுவதும் ஏரிகள், குளங்கள் மற்றும் கிளை ஆறுகள் வேகமாக வறண்டு வருகின்றன. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் கடும் கவலையில் உள்ளனர்.</p>
<p style="text-align: justify;"><strong>டெல்டாவின் உயிர்நாடி காவிரி</strong></p>
<p style="text-align: justify;">தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களின் ஒரு பகுதியை உள்ளடக்கிய காவிரி டெல்டா, தமிழகத்தின் முக்கிய வேளாண் மண்டலமாக திகழ்கிறது. சுமார் 12.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் காவிரி பாசனத்தை மட்டுமே நம்பி உள்ளன. குறுவை, சம்பா, தாளடி என ஆண்டுக்கு மூன்று பருவங்களில் நெல் சாகுபடி நடைபெறும் நிலையில், கரும்பு, வாழை, வெற்றிலை, மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களும் இப்பகுதியில் விளைவிக்கப்படுகின்றன.</p>
<p style="text-align: justify;"><strong>மேட்டூர் நீர் திறப்பில் தாமதம்... பாதிக்கப்பட்ட சாகுபடி</strong></p>
<p style="text-align: justify;">ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி நீர் திறக்கப்பட்டால் குறுவை சாகுபடி தடையின்றி நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு நீர் திறப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்ததோடு, அதன் தாக்கம் சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளுக்கும் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.</p>
<p style="text-align: justify;"><strong>361 ஏரிகள் முற்றிலும் வறண்டன</strong></p>
<p style="text-align: justify;">டெல்டா மாவட்டங்களில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 737 ஏரி, குளங்கள் உள்ளன. இதில் 361 ஏரி, குளங்கள் முழுமையாக வறண்டு விட்டன. மேலும் 350 நீர்நிலைகளில் 25 சதவீதத்திற்கும் குறைவான நீரே உள்ளது. வெறும் 23 நீர்நிலைகளில் மட்டுமே 25 சதவீதத்திற்கும் அதிகமான நீர் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p style="text-align: justify;"><strong>6-ல் ஒரு பங்கு மட்டுமே நீர் இருப்பு</strong></p>
<p style="text-align: justify;">டெல்டா மாவட்டங்களின் பொதுப்பணித்துறை நீர்நிலைகளில் மொத்தம் 6,687.7 மில்லியன் கனஅடி நீரை சேமிக்கும் வசதி உள்ளது. ஆனால் தற்போது வெறும் 1,097 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருப்பில் உள்ளது. அதாவது மொத்த கொள்ளளவில் சுமார் 16 சதவீதம், 6-ல் ஒரு பங்குக்கும் குறைவான அளவிலேயே நீர் இருப்பது கவலைக்குரிய நிலையை வெளிப்படுத்துகிறது.</p>
<p style="text-align: justify;"><strong>நிலத்தடி நீர் சரிவு... குடிநீர் நெருக்கடி அபாயம்</strong></p>
<p style="text-align: justify;">ஏரிகள் மற்றும் குளங்கள் வறண்டு வருவதால் நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. பல பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகளில் நீர் அளவு குறைந்துள்ளதால், எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. கால்நடைகளுக்கான குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.</p>
<p style="text-align: justify;"><strong>நீண்டகால தீர்வை வலியுறுத்தும் விவசாயிகள்</strong></p>
<p style="text-align: justify;">காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்பதுடன், ஏரிகள் மற்றும் குளங்களை ஆழப்படுத்துதல், கால்வாய்களை தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பை அதிகரித்தல், பாரம்பரிய நீர்நிலைகளை பாதுகாத்தல் போன்ற நீண்டகால திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இது விவசாயத்தில் வாழ்வாதாரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
Source: Read Full Article