
<p>தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அரசியல் சூழல் மிகவும் பரபரப்பாக இருக்கிறது. எங்கு திரும்பினாலும் குதிரை பேரம் என்ற சொல்லே ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில், தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், தற்போது திமுக பக்கம் அது திரும்பியுள்ளது. தவெக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க திமுக முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தவெக எம்எல்ஏ-க்களும் சிலரும் அது உண்மை தான் என்று கூறி, ஆதாரங்களையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<h2>“ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணையச் சொல்லி ரூ.50 கோடி பேரம் பேசினார்கள்“</h2>
<p>ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணன், ஏரலில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் தான் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக, அதிமுக மற்றும் பாஜகவினர் கூட்டு சேர்ந்து, சமூக வலைதளங்கள் மூலம் தன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவதாக கூறினார்.</p>
<p>மேலும், தன்னை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் சேர வேண்டும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர்கள் என்று கூறியும், திமுகவை சேர்ந்த புரோக்கர்கள் என்று கூறியும், சென்னையில் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் வைத்து தன்னை வந்து நேரடியாக பார்த்து, 50 கோடி ரூபாய்க்கு மேல் தருவதாகவும், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணையுமாறும், அமைச்சர் பதவி தருவதாகவும் பேரம் பேசினர் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால், “உங்களை என்ன செய்வோம் என்றே தெரியாது“ எனவும் மிரட்டல் விடுத்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், தன்னிடம் பேரம் பேசப்பட்டது தொடர்பான ஆடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.</p>
<p>இந்த நிலையில் தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் திமுகவினர் குதிரை பேரம் நடத்தியதாக வந்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் சுமார் 10 பேரை கைது செய்து விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>
<h2>“ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியுள்ள சரவணன்“</h2>
<p>முன்னதாக, ஸ்ரீவைகுண்டத்தில், முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>யின் ரசிகை ஒருவரை, அந்த தொகுதி <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> எம்எல்ஏ சரவணனுக்கு நெருக்கமான கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி, காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.</p>
<p>இந்த பிரச்னை பெரிதாக வெடித்த நிலையில், எம்எல்ஏ சரவணன், அப்பெண்ணிடம், அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி வேலை வாங்கித் தருவதாக சமரசம் செய்ய முயன்றதாகவும், மற்றொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>
<p>பின்னர் விசாரணையின்போது, இன்னொரு அமைச்சருக்கும் இந்த பிரச்னை தெரியும் என்றும் மேலிடத்திற்க தெரியும் என்றும் குற்றவாளிகள் கூறியதாக தகவல் வெளியானது. இதையடுத்து, குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்எல்ஏ சரவணன் பதவி விலக வேண்டும என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.</p>
<p> </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/home-test-methods-guide-to-identify-real-vs-fake-cheese-266406" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article