
<p style="text-align: justify;">காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு நள்ளிரவு வரை பத்திரப்பதிவு பணிகள் நீடிக்கும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களும் சுபமுகூர்த்த நாட்கள் என்பதால், ஸ்ரீபெரும்புதூர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக மட்டும் சுமார் 300-க்கும் மேற்பட்ட டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன. இதனால், அலுவலக நேரம் முடிந்த பிறகும், இரவு 8:00 மணியைக் கடந்தும் பத்திரப்பதிவு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.</p>
<h3 style="text-align: justify;">உச்சகட்ட ரியல் எஸ்டேட் விற்பனை</h3>
<p style="text-align: justify;">ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக்காலமாக ரியல் எஸ்டேட் மற்றும் மனைப்பிரிவு (பிளாட்) விற்பனை மிக உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாகவும், நாளை சுபமுகூர்த்த நாள் என்ற சென்டிமென்ட் காரணமாகவும், இன்று தங்களது சொத்துக்களைப் பதிவு செய்ய வரலாறு காணாத அளவில் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் குவிந்தனர்.</p>
<h3 style="text-align: justify;">முடங்கிய சர்வர்; தவித்த பொதுமக்கள்</h3>
<p style="text-align: justify;">பொதுமக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், இன்று காலை முதலே பத்திரப்பதிவுக்கான இணையதள சர்வர் (Registration Server) கடுமையான மந்தநிலையுடன் இயங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் டோக்கன் பெற்று காத்திருந்த பொதுமக்களின் ஆவணங்களைச் சரிபார்ப்பதிலும், விரல் ரேகை மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றுவதிலும் கடும் காலதாமதம் ஏற்பட்டது. வழக்கமாக மாலைக்குள் முடிய வேண்டிய பணிகள், சர்வர் கோளாறு மற்றும் 300 டோக்கன்கள் விநியோகிக்கப்பட்ட காரணத்தால் தொடர்ந்து இழுபறியாகவே நீடித்தது. இதனால் காலையிலிருந்து காத்திருந்த முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் உணவின்றி கடும் தவிப்பிற்குள்ளாகினர்.</p>
<h3 style="text-align: justify;">நள்ளிரவு வரை தொடரும் பணிகள்</h3>
<p style="text-align: justify;">பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளான போதிலும், நீண்ட தூரத்திலிருந்து வந்து காத்திருப்பவர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் இரவு 8:00 மணியைக் கடந்தும் தங்களது பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, இந்த பத்திரப்பதிவுப் பணிகள் நள்ளிரவு வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. முகூர்த்த நாட்களில் இதுபோன்ற குளறுபடிகளைத் தவிர்க்க பதிவுத்துறையின் இணையதளச் சேவையைத் தடையின்றி வழங்கவும், சிறப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் அரசு முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.</p>
Source: Read Full Article