
<p style="text-align: justify;"><strong>தஞ்சாவூர்:</strong> மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைனில் உங்களின் வீட்டு விவரங்களை பதிவு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.</p>
<p style="text-align: justify;">இந்தியாவில் நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 பணிகள் தற்போது புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் தொடங்கியுள்ளன. இதுவரை முழுமையாக களப்பணியாளர்கள் மூலம் மட்டுமே நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு, முதன்முறையாக டிஜிட்டல் (Digital) முறையிலும் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பொதுமக்கள் தாங்களாகவே வீட்டுத் தகவல்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. முதல் கட்டமாக வீடுகள் மற்றும் வீட்டு வசதிகள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த ஆன்லைன் பதிவு ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை நடைபெறுகிறது. அதன் பின்னர் ஆகஸ்ட் 1 முதல் 30 வரை கணக்கெடுப்புப் பணியாளர்கள் நேரடியாக வீடுகளுக்கு வந்து தகவல்களை சேகரிப்பார்கள். ஆன்லைனில் பதிவு செய்யாதவர்களும் அந்த நேரத்தில் தங்களது விவரங்களை நேரடியாக வழங்கலாம்.</p>
<p style="text-align: justify;">ஆன்லைனில் பதிவு செய்ய விரும்புவோர், மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைய வேண்டும். அதில் முதலில் தாங்கள் வசிக்கும் மாநிலத்தைத் தேர்வு செய்து, திரையில் காட்டப்படும் கேப்சா குறியீட்டை பதிவு செய்ய வேண்டும். பின்னர் குடும்பத் தலைவரின் பெயர், செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி (OTP) எண்ணை உள்ளீடு செய்தவுடன் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.</p>
<p style="text-align: justify;">அதனைத் தொடர்ந்து, கூகுள் மேப் உதவியுடன் வீட்டின் துல்லியமான இருப்பிடத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் வீட்டின் கட்டுமான வகை, மொத்த அறைகள் எண்ணிக்கை, குடிநீர் வசதி, கழிவறை வசதி, சமையலறை இருப்பது, பயன்படுத்தப்படும் சமையல் எரிபொருள், வீட்டில் உள்ள வாகனங்கள், ரேடியோ, தொலைக்காட்சி, கணினி, மடிக்கணினி, செல்போன் உள்ளிட்ட வசதிகள் குறித்து கேட்கப்படும். அதில் சரியான தகவல்களை மட்டும் பதிவு செய்ய வேண்டும்.</p>
<p style="text-align: justify;">அனைத்து தகவல்களையும் சரிபார்த்து உறுதிப்படுத்தியவுடன், அந்த வீட்டிற்கு தனித்துவமான வீட்டு கணக்கெடுப்பு அடையாள எண் (House Listing ID) உருவாகும். அந்த எண்ணை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அல்லது குறிப்பெடுத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஆகஸ்ட் 1 முதல் 30 வரை வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்புப் பணியாளரிடம் இந்த ஐடி எண்ணை வழங்கினால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தகவல்களை அவர் சரிபார்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்.</p>
<p style="text-align: justify;">இணையதளம் மூலம் பதிவு செய்வது கட்டாயமல்ல. இது பொதுமக்களின் விருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வசதியாகும். இணையத்தை பயன்படுத்துவதில் சிரமம் உள்ளவர்கள் எந்தவித கவலையும் கொள்ளத் தேவையில்லை. கணக்கெடுப்புப் பணியாளர் வீட்டிற்கு வரும்போது தேவையான அனைத்து தகவல்களையும் நேரடியாக வழங்கினாலே போதுமானது. இதனைத் தொடர்ந்து நடைபெறும் 2-வது கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்க உள்ளது. அப்போது குடும்ப உறுப்பினர்கள், கல்வி, தொழில், சமூக மற்றும் பொருளாதார விவரங்கள் உள்ளிட்ட விரிவான தகவல்கள் சேகரிக்கப்படும். எனவே தற்போது கிடைக்கும் வீட்டு கணக்கெடுப்பு ஐடி எண்ணை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p>
Source: Read Full Article