
<p style="text-align: justify;">இன்றைய டிஜிட்டல் உலகில் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கும் குறைந்து வருகிறது. செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் வழக்கமும் அருகி வருகிறது. அவசர, அவசரமான வாழ்வில் தங்களுக்கு தேவையான செய்திகளை மக்கள் விரைவாக, பார்த்த நொடிகளிலேயே தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதற்காக ஏபிபி நாடு முக்கியமான செய்திகளை மட்டும் தொகுத்து தலைப்புச் செய்திகளாக ஒரு சில வரிகளில் தருகிறது. இன்றைக்கு இதை மட்டும் நீங்கள் படித்தால் மட்டும் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் உங்கள் கவனத்தில் இருந்து விலகாது.</p>
<h3 style="text-align: justify;">ஜூலை 27,2026ஆம் தேதிக்கான முக்கிய தலைப்புச் செய்திகள். </h3>
<p style="text-align: justify;">1.நீட் (NEET) உள்ளிட்ட தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுப் புகார்களைத் தொடர்ந்து, ஆதார் திட்டத்தின் சிற்பியும் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனருமான நந்தன் நிலேகனி தலைமையில் 6 பேர் கொண்ட உயர்மட்டப் பணிக்குழுவை (High-Powered Task Force) அமைத்துப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூலை 26) அதிகாரப்பூர்வ வீடியோ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;">2.தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p>
<p style="text-align: justify;">3.சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்களுக்கான கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழக அரசின் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றி கழகம் (தவெக) தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும், மக்கள் மத்தியில் கட்சி போய் சேருவதற்கும் ஊடகங்களும் செய்தியாளர்களுமே மிக முக்கியக் காரணம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">4.சென்னையில் வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை காலங்களில் நகருக்குள் வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கூவம் ஆறு மற்றும் ஓக்கியம் மடுவு ஆகிய முக்கிய நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகள் இன்று (ஜூலை 27) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகின்றன. சென்னை மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இப்பணிகள் தீவிரமாக நடைபெறவுள்ளன.</p>
<p style="text-align: justify;">5.மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்து வரும் நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டங்களை அரசியல் ஆதாயத்திற்காகத் திமுக தன்வசப்படுத்த முயற்சிப்பதாகத் தமிழக எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாணவர்களின் உணர்வுப்பூர்வமான இந்த போராட்டக் களத்தில் நுழைந்து திமுக தேவையற்ற அரசியல் குழப்பங்களை விளைவித்து வருவதாகச் சாடினார்.</p>
<p style="text-align: justify;">6.அதிமுகவிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் (<a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a>) இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேரின் ராஜினாமா மற்றும் தகுதிநீக்க மனுக்கள் மீதான புதிய விசாரணைக்காக, அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்றக் குழுத் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி (இ.பி.எஸ்) மற்றும் சம்பந்தப்பட்ட 4 முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் வரும் ஜூலை 30-ஆம் தேதி சபாநாயகர் முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளர் ஆர். சாந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">7.பெங்களூரிலிருந்து தர்மபுரி வழியாகச் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த பாசஞ்சர் ரயில், இன்று காலை தர்மபுரி ரயில் நிலையத்தின் 2-ஆவது நடைமேடைக்கு வந்து நின்றபோது, அதன் ஒரு பெட்டியின் கீழ் பகுதியிலிருந்து திடீரென அடர்ந்த புகை வெளியேறியதால் அங்கு பெரும் பரபரப்பும் தீப்பீதியும் ஏற்பட்டது.</p>
<p style="text-align: justify;">8.இந்தியாவில் 16 வயதுக்குக் குறைவான குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் (Social Media) பயன்படுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு உடனடியாகத் நாடு தழுவிய அளவில் புதிய தடைச் சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மத்திய அரசுக்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸ் நாடாளுமன்றம் அண்மையில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகத் தடையை வெற்றிகரமாகச் சட்டமாக்கியதை வரவேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;">9.மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி வருகிற ஆகஸ்ட் 1-ஆம் தேதி (சனிக்கிழமை) தமிழகம் வரவுள்ளதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (TNCC) தலைவர் பி. மாணிக்கம் தாகூர் எம்.பி. தனது எக்ஸ் (X) சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்தபடி இந்த வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">10.நீட் (NEET) மற்றும் பிற தேசிய அளவிலான பொதுத் தேர்வுகளில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்காக, கடுமையான தண்டனைகளை உள்ளடக்கிய "பொதுத் தேர்வுகள் (முறையற்ற வழிமுறைத் தடுப்பு) திருத்த மசோதா - 2024" (Public Examinations (Prevention of Unfair Means) Amendment Bill) இன்று (ஜூலை 27, திங்கள்கிழமை) நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, இந்த மசோதாவை மத்திய அரசு இன்று முறைப்படி அறிமுகம் செய்கிறது.</p>
Source: Read Full Article