
<p style="text-align: justify;"><span style="color: #ba372a;"><strong>Vallakkottai Subramania Swamy Temple Kancheepuram:</strong></span> காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்திபெற்று விளங்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலம் கல்யாண பிரார்த்தனை தலமாகவும், சத்ரு சம்கார பரிகார தலமாகவும் விளங்குவதால், இங்கு வாரந்தோறும் நடைபெறும் பரிகார பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். புராண காலத்தில் தேவர்களின் தலைவனாகிய இந்திரன் இங்கு வந்து முருகப்பெருமானை வணங்கி, இந்திராணியைத் திருமணம் செய்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. மேலும், வல்லன் எனும் அசுரனை முருகப்பெருமான் அழித்து இங்கு கோயில் கொண்டமையால், இந்த ஊருக்கு வல்லக்கோட்டை என்ற பெயர் வழங்கப்படுகிறது.</p>
<h3 style="text-align: justify;">கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு</h3>
<p style="text-align: justify;">பிரசித்தி பெற்ற இத்திருக்கோயில் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, கடந்த 2025-ஆம் ஆண்டு ஆனி மாதம் 23-ஆம் தேதி விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, நட்சத்திர முறைப்படி கடந்த வாரம் இத்திருக்கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, தமிழ்மாத முறைப்படி கும்பாபிஷேகம் நிறைவடைந்த ஓராண்டு நிறைவு உற்சவம் செவ்வாய்க்கிழமை அன்று திருக்கோயிலில் மிகக் கோலாகலமாகத் கொண்டாடப்பட்டது.</p>
<h3 style="text-align: justify;">1008 கலசாபிஷேகமும் விசேஷ பூஜைகளும்</h3>
<p style="text-align: justify;">இந்த ஓராண்டு நிறைவு உற்சவத்தை முன்னிட்டு, திங்கட்கிழமை காலையில் உற்சவர் சண்முகப்பெருமானுக்குச் சத்ரு சம்கார யாகபூஜை நடத்தப்பட்டது. அன்று மாலையில் 1008 கலசங்கள் நிறுவப்பட்டு, 18 அர்ச்சகர்களின் வேதமந்திர பாராயணத்துடன் முதல் கால யாகபூஜை தொடங்கியது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலையில் இரண்டாம் கால யாகபூஜை நடைபெற்றது. பின்னர் நண்பகல் 12 மணிக்கு மூலவருக்கு 1008 கலசாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மூலவருக்குச் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு அமைச்சர்கள் எஸ்பிகே.தென்னரசு, சீ.ரமேஷ் ஆகியோர் பெயரில் விசேஷ அர்ச்சனை செய்யப்பட்டது. அப்போது முருகப்பெருமான் தனக்கு விருப்பமான சிவப்புநிற வெட்சிமலர் மாலை அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.</p>
<h3 style="text-align: justify;">திருக்கல்யாண உற்சவமும் கலை நிகழ்ச்சிகளும்</h3>
<p style="text-align: justify;">அதனைத் தொடர்ந்து பிற்பகல் 4 மணிக்கு உற்சவர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு விசேஷ அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டு, வெட்சி எனும் செச்சை மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டுச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதன் பின்னர், பக்தர்கள் திரளாகக் கூடியிருக்க, மங்கலவாத்தியங்கள் முழங்கிடத் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாகத் தொடங்கி மாங்கல்யதாரணம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு நாட்டிய புகழ் கலைவளர்மணி மீனாட்சி ப்ரியா விநாயகா நாட்டியாலயா குழுவினரின் பக்தி பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாட்டிய குழுவினர் தீச்சட்டிகள் ஏந்தி நிகழ்த்திய நடனத்தைத் திரளான பொதுமக்கள் கூடியிருந்து கண்டுகளித்தனர்.</p>
<h3 style="text-align: justify;">வெள்ளி மயில் வாகன வீதி உலா</h3>
<p style="text-align: justify;">இரவு நேரத்தில் வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அதனைத் தொடர்ந்து, 54 நாயனங்கள் மற்றும் 54 மேளதாளங்கள் அதிர முழங்கிட வல்லக்கோட்டை கிராமப் பகுதிகளில் சுவாமி வீதி உலா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இத்திருக்கோயிலின் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு உற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும், மண்டல இணை ஆணையர் சி.குமரதுரை அறிவுரைப்படி, திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் மற்றும் அறங்காவலர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.</p>
Source: Read Full Article