
<p>தமிழ்நாட்டில் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி மற்றும் அதிமுக எம்எல்ஏ-க்கள் நான்கு பேர் ராஜினாமா செய்த தொகுதி என மொத்தம் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.</p>
<h2><strong>இடைத்தேர்தல்:</strong></h2>
<p>இந்தாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள இந்த தேர்தலில் தவெக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற ஆர்வம் காட்டி வருகிறது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மார்க்சிஸ்டை தன் பக்கம் இழுத்துள்ளது. </p>
<p>விரைவில் நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தலில் விசிக ஒரு தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அம்பாசமுத்திரம், பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 5 தொகுதிகளில் விசிக-வினர் தங்களுக்கு மதுராந்தகம் தொகுதியை ஒதுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். </p>
<h2><strong>ஒரு தொகுதி கேட்கும் விசிக:</strong></h2>
<p>இந்த தொகுதியில் வன்னியர் சமுதாய மக்கள் மற்றும் பட்டியலின சமுதாய மக்களின் வாக்குகள் அதிகளவு உள்ளது. இந்த தொகுதியை தங்களுக்கு ஒதுக்கினால் தாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a>-வினர் உள்ளனர். குறிப்பாக, ஆளுங்கட்சியுடனான கூட்டணி என்பதால் விசிக-வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது. </p>
<p>அப்படி மதுராந்தகம் தொகுதி ஒதுக்காவிட்டால் வேறு தொகுதியை ஒதுக்குமாறு விசிக கேட்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி கிழக்கில் திருமாவளவன் போட்டியிடுவார் என்று தொடக்கத்தில் தகவல் வெளியான நிலையில், அவர் போட்டியிடப்போவதில்லை என்று மறுத்துவிட்டார். இதனால், விசிக-விற்கு இடைத்தேர்தலில் ஏதேனும் ஒரு தொகுதி ஒதுக்கினால் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் யார் போட்டியிடுவார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. </p>
<h2><strong>கடும் சவால்:</strong></h2>
<p>தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் இல்லாமல் சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு பிறகு நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இந்த இடைத்தேர்தல் மிகப்பெரிய சவாலையும், விறுவிறுப்பையும் உண்டாக்கியுள்ளது. இந்த தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக-வும், தங்களிடம் இருந்து பறிபோன தொகுதிகளை தாங்களே மீண்டும் பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக-வும் களமிறங்குகின்றனர். இதனால், இந்த இடைத்தேர்தலும் தமிழக சட்டசபைத் தேர்தலைப் போலவே இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.</p>
<p>திமுக இந்த இடைத்தேர்தலில் களமிறங்குவது உறுதியாக உள்ள நிலையில், அதிமுக இந்த இடைத்தேர்தலை எதிர்கொள்ளுமா? என்ற ஒரு சந்தேகமும் உள்ளது. ஏனென்றால், சட்டசபைத் தேர்தல் தோல்வியும், அதன்பின்பு நடந்த விவகாரமும் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. மீண்டும் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்க நேரிடும் அபாயமும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. </p>
<p><iframe src="//www.youtube.com/embed/028-pAMxL6I?si=bkP6KUT661oZClEk" width="560" height="314" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
Source: Read Full Article