
<p>முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு பிறப்பித்த உத்தரவு என்னென்ன என்பதை கீழே விரிவாக காணலாம். </p>
<p>அந்த மாநாட்டில் முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> பேசியதாவது,</p>
<h2><strong>ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள்:</strong></h2>
<p>கல்வி என்பது ஒரு கொண்டாட்டம். அது எப்போது கொண்டாட்டமாக மாறும்? ஒழுக்கத்தைப் போதிக்கிற, சாதிய வேறுபாடுகளைத் தாண்டி சாதிக்கிற மாணவர்களை உருவாக்குகின்றபோதுதான் கல்வி கொண்டாட்டமாக இருக்கும். அதைக் கண்காணிப்பதும் உங்கள் கைகளில்தான் உள்ளது.</p>
<p>ரேஷன் கடைகளில் எடை குறைபாடுகள் இல்லாமல், தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள், மின்னிணைப்பு, மின்சார விநியோகம், முதியோர் ஓய்வூதியம், சான்றிதழ்கள் வழங்குவது போன்றவற்றில் விரைவான செயல்பாடுகள் வேண்டும். மேலும், இயற்கைப் பேரிடர் ஏற்படும் காலங்களில் உடனடி நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்துச் செயல்பட வேண்டும்.</p>
<h2>எப்படி செயல்பட வேண்டும்?</h2>
<p>‘மக்களிடம் செல்; மக்களுடன் வாழ்; மக்களிடமிருந்து கற்றுக்கொள்' என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்கள். அதுதான் நமது தாரகமந்திரம். அதற்கேற்ப அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் வகையில் உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும்.</p>
<p>மக்கள் மனுக்களைக் கொண்டு வரும்போது இது சாத்தியம் என்றோ, சாத்தியம் இல்லையென்றால் சரியான காரணங்களுடன் மக்களிடம் தெளிவுப்படச் சொன்னாலே அவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். அரசின் சேவைகள் அவர்கள் வீட்டுக்கே போய்ச்சேர வேண்டும். அதற்கு உங்களுடைய ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.</p>
<h2><strong>நேரடி அவசியம்:</strong></h2>
<p>அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கு மாவட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரும்போது அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். அரசுத் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகின்ற என்பதை அதிகாரிகள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய வேண்டும். </p>
<h2>சுதந்திரமாக செயல்படலாம்:</h2>
<p>வெளிப்படைத்தன்மை அடிப்படைத் தத்துவமாக இருக்க வேண்டும். அதனால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அரசு விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்படலாம். தனிநபர்களின் தலையீடு இருக்காது. </p>
<p>சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளிகளில் சாதி ஊக்குவிப்பு சம்பவங்களை கல்வித்துறை கண்காணிக்க வேண்டும். </p>
<h2>ஒருங்கிணைந்த செயல்பாடு:</h2>
<p>கோயில் திருவிழாக்கள், அரசியல் பேரணிகள் மற்றும் பொது நிகழ்வுகளின்போது நெரிசல் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும். பொதுப்பணித் துறை (PWD), அறநிலையத் துறை, தீயணைப்பு & மீட்பு மற்றும் வருவாய்த் துறைகள் அனைத்து முக்கிய நிகழ்வுகளின்போதும் காவல்துறையுடன் முன்கூட்டியே ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.</p>
<h2><strong>நில வழக்கு தீர்வுக் குழு:</strong></h2>
<p>தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் நடைபெறும் பெரும்பாலான காயப்படுத்தல் வழக்குகள் மற்றும் கொலைகளுக்கு, நில தகராறுகளே முதன்மைக் காரணமாக உள்ளன. மாவட்ட அளவிலான நில வழக்கு தீர்வுக் குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் சீரமைக்கப்பட்டு இருவார இடைவெளியில் கூட்ட வேண்டும். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதந்தோறும் மதிப்பாய்வு நடத்தி அதன் செயல்திறனை மதிப்பீடு செய்ய வேண்டும்.</p>
<p>பெண்களுக்குப் பாதுகாப்பற்ற பகுதிகள், குற்றம் அதிகமான இடங்கள், விபத்துகள் அதிகமாக நிகழும் பாதைகள் மற்றும் மூத்த குடிமக்கள் அதிகமாக வருகைதரும் இடங்கள் என கண்டறியப்பட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் CCTV நிறுவும் இயக்கத்தை முனைப்பாக நடத்த வேண்டும். இரண்டாம்நிலை நகரங்கள் மற்றும் தமிழ்நாட்டின் நகர்புற சுற்றுப்புற பகுதிகளில் உள்ள Coverage இடைவெளிகளைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். </p>
<h2>சிசிடிவி:</h2>
<p>மாவட்ட அளவில் நடத்தப்படும் மாதாந்திர கூட்டங்களில் CCTV நிறுவல் தொடர்பான பணி முன்னேற்றம் மதிப்பாய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்பு ஒவ்வொரு மாதாந்திர மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் நிலையான மற்றும் சமரசமற்ற நிகழ்ச்சி நிரலாக இருக்க வேண்டும். முக்கிய இடங்கள் கண்காணிப்பு, CCTV Coverage ஆகியவற்றின் முன்னேற்றம் ஒவ்வொரு கூட்டத்திலும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். </p>
<p>அதேபோல் CoP/IGP/DIG/SP ஆகியோர் ஆய்வின்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களின் புள்ளிவிவரங்கள் மட்டுமல்லாமல், விசாரணையின் தரம், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் சார்ந்தோருக்கான இழப்பீடு மற்றும் நிலுவையிலுள்ள விசாரணை வழக்குகளின் நிலை ஆகியவற்றையும் மாதந்தோறும் மதிப்பாய்வு செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்ஸோ (POCSO) வழக்குகளில் FIR பதிவில் தாமதம் ஏற்படுவதைச் சகிக்கவே கூடாது.</p>
<h2><strong>விழிப்புணர்வு இயக்கம்:</strong></h2>
<p>பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் புகார்களை மறைக்கவோ தாமதமாக அனுப்பவோ கூடாது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட வேண்டும். மாநிலத்தின் சில பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து அதிகளவில் பதிவாகின்றன. பாதிக்கப்படக்கூடிய சமூகங்களில் இலக்கு கொண்ட அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.</p>
<h2><strong>சிறார் குற்றங்கள்:</strong></h2>
<p>சிறார் குற்றங்களில், கும்பல் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம், குற்றங்களில் ஈடுபடும் போக்கு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். பள்ளி இடைநிறுத்தம் குறிப்பிடத்தக்க ஆபத்து காரணியாக இருப்பதால், பள்ளி மற்றும் கல்வித்துறைகள் இடைநிறுத்தங்களை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும். சிறார் நீதி (JJ) சட்ட விதிகளை திறம்படப் பயன்படுத்த வேண்டும்.</p>
<p>கள்ளச்சாராயம் தடுப்பு குறித்து காவல், வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சட்டவிரோத மலைப்பகுதியில் சட்டவிரோத வடிகட்டல் (Illicit distillation) இடங்கள் பற்றிய தகவல் சேகரிக்க வேண்டும். சமூக அளவிலான தடுப்புக்கு உள்ளாட்சி அமைப்புகளைத் தீவிரமாக ஈடுபடுத்த வேண்டும்.<br />போதைப்பொருள் அச்சுறுத்தலை அமலாக்கம் மட்டுமே தீர்க்க முடியாது - போதைப்பொருள் தேவை குறைப்புக்கும் ( Drug Demand to be eliminated) சம கவனம் செலுத்தப்பட வேண்டும்.</p>
<h2><strong>எல்லை கண்காணிப்பு:</strong></h2>
<p>திருவள்ளூர், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற எல்லையோர மாவட்டங்கள் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதையும், உரிய அனுமதியின்றி கனிம வளங்கள் கடத்தப்படுவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். </p>
<p>சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் போன்ற தொழில்துறை மண்டலங்களில் குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர் மக்களிடையே கஞ்சா, குட்கா மற்றும் பிற போதைப்பொருள்களின் பரவல் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும். புலம்பெயர்ந்தோர் அதிகமாக வாழும் பகுதிகளில் இலக்கு கொண்ட விழிப்புணர்வு மற்றும் அமலாக்கம் நடத்தப்பட வேண்டும்.</p>
<p>இவ்வாறு அவர் பேசினார். </p>
<p> </p>
Source: Read Full Article