
<p style="text-align: justify;">சென்னை: காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட் மருத்துவமனைக்கு பச்சிளம் குழந்தைகளுக்கான நவீன ஆம்புலன்சை ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் ஈஸ்ட் வழங்கியது</p>
<p style="text-align: justify;">ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் ஈஸ்ட் (RID 3234), அமெரிக்காவின் ரோட்டரி கிளப் ஆஃப் இர்வின் அமைப்பு மற்றும் ரோட்டரி மாவட்டம் 5320, இர்வின் அமைப்புடனும் ஒருங்கிணைந்து 'புராஜெக்ட் சிசு' (Project SHISHU - குளோபல்கிராண்டு #2683839) திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட் மருத்துவமனைக்கு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட 'பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கான பிரத்யேக ஆம்புலன்ஸ்' நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. </p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/28/bf1a42c126bb3b1358b8861acfca98b41782641035227733_original.jpg" /></p>
<p style="text-align: justify;">அவசர மருத்துவ உதவியை வழங்கும் இந்த ஆம்புலன்ஸ் சேவையின் தொடக்க விழா, 2026 ஜூன் 26 அன்று மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளை முதலுதவி வழங்கி, பாதுகாப்பாக மருத்துவமனைக்கு கொண்டு வர இந்த ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படும்.</p>
<p style="text-align: justify;">இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ரோட்டரி சர்வதேச அமைப்பின் (RI) துணைத் தலைவர் (2026-27), இயக்குநர் (2025-27) மற்றும் எக்செல் குழும நிறுவனங்களின் தலைவர் AKS பொறியியலாளர் முருகானந்தம் எம் (MMM) மருத்துவமனையிடம் இந்த ஆம்புலன்ஸை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார். இந்நிகழ்வு, கௌரவ விருந்தினரான ரோட்டரி மாவட்ட (RID 3234) ஆளுநர் AKS வினோத் சராவகி மற்றும் ரோட்டரி சங்கத்தின் திரளான உறுப்பினர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;">காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ஜனனி சங்கர், கனிவான இச்செயலுக்காக தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அவர் தொடர்ந்து பேசுகையில்: "ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் ஈஸ்ட் அமைப்பின் இந்த உன்னதமான உதவிக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள். பிற மருத்துவமனைகளில் இருந்து தீவிர சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளை எங்களது தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (NICU) கொண்டு வரும்போது, அவர்களுக்கு வழியிலேயே முறையான சிகிச்சையளிக்கத் தேவையான அனைத்து நவீன உபகரணங்களும் இந்த ஆம்புலன்ஸில் உள்ளன.</p>
<p style="text-align: justify;">₹72 லட்சம் மதிப்பிலான இந்த ஆம்புலன்ஸ், போக்குவரத்தில் பயன்படுத்தக்கூடிய இன்குபேட்டர், பச்சிளம் குழந்தைகளுக்கான வென்டிலேட்டர் (செயற்கை சுவாசக் கருவி மற்றும் மேம்பட்ட உயிர் காக்கும் சாதனங்களை கொண்டிருக்கிறது. இது, குழந்தைகளை இடமாற்றம் செய்யும்போது NICU அளவிலான தீவிர சிகிச்சையை உடனடியாகவே வழங்க உதவுகிறது. "பச்சிளம் குழந்தைகளுக்கான நடமாடும் தீவிர சிகிச்சை பிரிவு" ஆக செயல்படுவதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆம்புலன்ஸ், குறிப்பாக நீண்ட தூர மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தின்போது, 24 வாரங்கள் போன்ற மிகக் குறைந்த வயதுள்ள மற்றும் 600 கிராமுக்கும் குறைவான எடையுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து எங்களது NICU பிரிவை வந்தடையும் வரை, உயிர்காக்கும் தீவிரசிகிச்சை தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்கிறது.</p>
<p style="text-align: justify;">எங்களது NICU பிரிவு, பிறவிக் குறைபாடுகள் மற்றும் சிக்கலான மருத்துவப் பிரச்சனைகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்பான சிகிச்சையளித்து, உயிர்களை காப்பாற்றும் ஒரு உயர்சிகிச்சை மையமாகும். இங்கு 600 கிராம் எடையுடன் பிறக்கும் மிகச் சிறிய குழந்தைகளுக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற குழந்தை நல மருத்துவ நிபுணர்கள் மூலம் 24 மணி நேரமும் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பும், சிகிச்சைப் பராமரிப்பும் வழங்கப்பட்டு வருகிறது," என்றார்.</p>
<p style="text-align: justify;">இந்நிகழ்வில் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் ஈஸ்ட் – ன் (RCME தலைவர் பாலாஜி ஸ்ரீநிவாசன் பேசுகையில்: "1985-இல் தொடங்கப்பட்டது முதல், RCME சென்னையில் சமூகச் சேவையில் ஒரு வலுவான அமைப்பாக திகழ்கிறது. 200 அர்ப்பணிப்புமிக்க உறுப்பினர்களைக் கொண்ட எங்களது சங்கம், அதிக தேவையுள்ள நபர்களுக்கு உதவியளிப்பதே உண்மையான சமூகசேவை என்று எப்போதும் நம்புகிறது. அந்த நம்பிக்கையின் பெருமைமிக்க வெளிப்பாடுதான் இந்த 'புராஜெக்ட் சிசு'. மருத்துவ உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதன் காரணமாக, எந்தவொரு பச்சிளம் குழந்தையும் உயிரிழப்பதில்லை என்பதை உறுதிசெய்யும் பணியை இந்த ஆம்புலன்ஸ் தீவிரமாக மேற்கொள்ளும். RCME சார்பில் தாய்-சேய் நலம், மகளிர் மேம்பாடு மற்றும் இளைஞர் நலன் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் திட்டங்களை சமூக நலனுக்காக நாங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்," எனக் குறிப்பிட்டார்.</p>
<p style="text-align: justify;">மேலும், பச்சிளம் குழந்தைகளுக்கான பராமரிப்பு, குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் சிகிச்சை, கண் குறைபாடுகளை நீக்குதல், மனநலம் மற்றும் சமூக நல்வாழ்வு உள்ளிட்ட சுகாதாரத் துறையில் RCME மேற்கொண்டு வரும் வேறுபல பணிகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p style="text-align: justify;">புராஜெக்ட் சிசு (Project SHISHU): புதிதாகப் பிறந்த குழந்தைகளின் நல்வாழ்வுக்கான ரோட்டரி சங்கத்தின் அர்ப்பணிப்பை உணர்த்தும் வகையில் இத்திட்டத்திற்கு 'சிசு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவப் பராமரிப்பில் இருக்கும் மிக முக்கியமான சவாலான — ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகளைப் பாதுகாப்பாக உயர்சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யும் தேவையை இந்த ஆம்புலன்ஸ் பூர்த்தி செய்யும். குறைப்பிரசவத்தில் பிறந்த மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகளை சைல்ட்ஸ் டிரஸ்ட் மருத்துவமனைக்கு பாதுகாப்பாகக் கொண்டு செல்ல உதவும் மேம்பட்ட உயிர் காக்கும் சாதனங்கள் மற்றும் வசதிகளுடன் இந்த ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. </p>
<p style="text-align: justify;">ரோட்டரி சர்வதேச அமைப்பின் மதிப்புமிக்க 'குளோபல் கிராண்ட்' (Grant #2683839) நிதி உதவியின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் ஈஸ்ட் (RID 3234) மற்றும் அமெரிக்காவின் ரோட்டரி கிளப் ஆஃப் இர்வின் ஆகிய இரு சர்வதேச அமைப்புகளின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமாகியுள்ளது. நாட்டின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு சேவையாற்றும் ரோட்டரி அமைப்புகளின் கூட்டுப்பணி, சமூகத்தில் பெரிய அளவில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இத்திட்டமே சான்றாகும்.</p>
Source: Read Full Article