
<p style="text-align: justify;">இந்திய ரயில்வே, ரயில்களின் துல்லியமான இயக்கம் மற்றும் தாமதங்களை உடனுக்குடன் கண்காணிப்பதற்காகத் தனது முதல் உள்முக ஆண்ட்ராய்டு மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.</p>
<p style="text-align: justify;">ரயில்வே செயல்பாடுகளின் திறனை மேம்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக, ரயில்கள் 15 நிமிடங்களுக்கும் மேலாகத் தாமதமானால் தானாகவே அதிகாரிகளுக்கு எச்சரிக்கை அனுப்பும் புதிய மொபைல் செயலியை இந்திய ரயில்வேயின் விஜயவாடா கோட்டம் வெற்றிகரமாக அறிமுகம் செய்துள்ளது.</p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/dad637943e6db45895aef259049a1d6a1782812341744193_original.JPG" /></p>
<p style="text-align: justify;">இந்திய ரயில்வே, ரயில்களின் துல்லியமான இயக்கம் (Punctuality) மற்றும் தாமதங்களை உடனுக்குடன் கண்காணிப்பதற்காகத் தனது முதல் உள்முக ஆண்ட்ராய்டு மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. தென் கடலோர ரயில்வேயின் (SCoR) விஜயவாடா கோட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலிக்கு Punctuality BZA எனப் பெயரிடப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இதுவரை பயன்பாட்டில் இருந்த ‘ஐசிஎம்எஸ்’ (ICMS) இணையதளத்தில் லாகின் செய்ய ஒவ்வொரு முறையும் ஓடிபி (OTP) பதிவிட வேண்டியிருந்தது. மேலும், பல திரைகளை மாற்றி மாற்றியே விபரங்களைச் சேகரிக்க வேண்டியிருந்தது. ஆனால், இந்த புதிய மொபைல் ஆப் மூலம் அதிகாரிகள் எந்தவொரு இடத்திலிருந்தும், மிக எளிதாக ஒரே ஒரு டேஷ்போர்டில் ஒட்டுமொத்த ரயில் இயக்க விபரங்களையும் தெரிந்துகொள்ள முடியும். ஏதேனும் ஒரு ரயில் 15 நிமிடங்களுக்கும் மேலாகத் தாமதமாக இயங்கினால், இந்த செயலி தானாகவே அதிகாரிகளுக்கு உடனடி அறிவிப்புகளை (Notifications) அனுப்பிவிடும்.</p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/2d16d8280fe6b8bd21c632bddbae60491782812359804193_original.JPG" /></p>
<p style="text-align: justify;">இதில் ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு ஜிபிஎஸ் (GPS) மூலம் தானாகவே பதிவு செய்யப்படுவதோடு, தாமதத்திற்கான காரணங்களும் டிஜிட்டல் முறையில் பதிவேற்றப்படும்.ரயில்கள் தாமதமாவது குறித்த விபரங்கள் தானாகவே பிடிஎஃப் (PDF) அறிக்கையாகத் தயாராகிவிடுவதால், காகித வேலைகளும், மனித உழைப்பும் பெருமளவு குறையும்.</p>
<p style="text-align: justify;">இந்த டிஜிட்டல் முறையினால், ரயில் மேலாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் தங்களின் நேரத்தைச் சேமித்து, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில் புறப்பாடு தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்த முடியும். இந்த செயலி மூலம் கிடைக்கும் உடனுக்குடனான தரவுகள் (Real-time data), ரயில்கள் தாமதமாகும் போது அதிகாரிகள் மிக விரைவாகச் செயல்பட்டுச் சரியான முடிவுகளை எடுக்க உதவும் என்று கூறப்படுகிறது.</p>
Source: Read Full Article