
<h3 dir="ltr"><strong>பெண்களிடம் நெருக்கமாக பழக முயற்சி</strong></h3>
<p dir="ltr">சென்னை புழல் அடுத்த காவாங்கரை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்தவர் பாலாஜி ( வயது 43 ) திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள சிறுவாக்கம் பகுதியைச் சேர்ந்த இவர்.</p>
<p dir="ltr">அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் ஏராளமான பெண்கள் பணியாற்றி வந்த நிலையில் பணியின் பெயரில் அவர்களிடம் பாலாஜி அடிக்கடி பெண்களிடம் நெருக்கமாக பழக முயன்றதாக கூறப்படுகிறது.</p>
<h3 dir="ltr"><strong>பாலியல் ரீதியாக சீண்டல்</strong></h3>
<p dir="ltr">மேலும் அவரிடம் பழக மறுக்கும் பெண்களுக்கு அதிக பணி சுமை கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார் என சொல்லப்படுகிறது. குறிப்பாக புழல் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஊழியரிடம் அவர் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் பேசி தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது.</p>
<p dir="ltr">நாளடைவில் அந்த பெண்ணிடம் பாலாஜி எல்லை மீறி நடந்து கொண்டதுடன் , பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பாலியல் ரிதியாக அத்து மீறிய நிலையில் இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவரது செயல்களால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.</p>
<p dir="ltr">எனவே நடந்த சம்பவம் குறித்து புழல் காவல் நிலையத்திற்கு சென்று பாலாஜி மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சூப்பர் வைசர் பாலாஜியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற் கொண்டனர்.</p>
<h3><strong>பெண்களிடம் உல்லாசம்</strong></h3>
<p>பாலாஜி நிறுவனத்தில் பணிபுரியும் பல பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததும் , மேலும் சில ஊழியர்களிடமும் அத்து மீறி நடந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>மேலும் பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் குடும்ப சூழ்நிலை , வேலை இழப்பின் அச்சம் மற்றும் சமூக காரணங்களால் இதுவரை வெளிப்படையாக புகார் அளிக்காமல் இருந்த நிலையில் இதனால் பாலாஜியின் செயல்கள் நீண்ட காலமாக வெளிச்சத்திற்கு வராமல் இருந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.</p>
<p>இதையடுத்து போலீசார் பாலாஜியை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.</p>
Source: Read Full Article