
<h3><strong>சட்ட விரோத வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை</strong></h3>
<p>சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் திருவல்லிக்கேணி, பெல்ஸ் ரோடு, வாலாஜா ரோடு சந்திப்பில் கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி பையுடன் நின்றிருந்த ஒரு நபரை விசாரணை செய்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது , அதில் கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.</p>
<p>அதன் பேரில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து சட்ட விரோதமாக போதை பொருட்களை விற்பனை செய்த மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் பகுதியை சேர்ந்த கம்சாமுவான் ( வயது 34 ) என்பவரை கைது செய்தனர்.</p>
<p>அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா மற்றும் 305 எண்ணிக்கைகள் கொண்ட Tackdol உடல் வலி நிவாரண மாத்திரைகள் , போதை பொருட்கள் விற்ற பணம் ரூ.15,000 மற்றும் 8 சிரஞ்சிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.</p>
<p>விசாரணையில் , கைது செய்யப்பட்ட கம்சாமுவான் என்பவர் வெளி மாநிலத்தில் இருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வாங்கி வந்து, சென்னையில் விற்பனை செய்து வந்ததும், இவர் மீது ஏற்கனவே திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கு உள்ளது தெரிய வந்தது. </p>
<p>கைது செய்யப்பட்ட கம்சாமுவான் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.</p>
<h3><strong>வண்ணாரப்பேட்டையில் 70 உடல் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் </strong></h3>
<p>சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் மூலகொத்தலம் சுடுகாடு அருகில் கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரிடம் விசாரணை செய்து, சோதனை செய்த போது, உடல் வலி நிவாரண மாத்திரைகளை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.</p>
<p>அதன் பேரில் வண்ணாரப்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த அருண் ( வயது 19 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 20 Nitrozebam மாத்திரைகள், 50 Tapentadol மாத்திரைகள் என மொத்தம் 70 உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.</p>
<p>விசாரணையில் அருண் மீது ஏற்கனவே 2 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட அருண் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.</p>
Source: Read Full Article