
<p>விழுப்புரம் : பாஜக தலைமைகளின் முழு ஆதரவோடு அண்ணாமலை இந்த புதிய இயக்கத்தைத் தொடங்க முயல்கிறார். இது முற்றிலும் ஒரு புதிய கட்சி அல்ல, மாறாக பாஜகவின் மற்றொரு முகமூடி மட்டுமே என அமைச்சர் வன்னி அரசு விமர்சனம் செய்துள்ளார்.</p>
<p> </p>
<p>சமூகநீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு விடுதிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த அமைச்சர், நோயாளிகளிடமும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார், தொடர்து குழந்தைகள் வார்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது பெண் குழந்தைக்கு பிரபாவதி என பெயரிட்டார். அதனை தொடர்ந்து மரக்காணம் அரசு மருத்துவமனைகளில் அமைச்சர் இன்று நேரில் ஆய்வு செய்தார். </p>
<p> </p>
<p>ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை, தொழில்நுட்ப உபகரணங்களின் தேவை மற்றும் கூடுதல் கட்டிட வசதிகள் குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இவை அனைத்தையும் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி விரைவில் தேவையான வசதிகள் செய்து தரப்படும்" என்றார். </p>
<h2>சாதிவாரி கணக்கெடுப்பு - விசிக நிலைப்பாடு </h2>
<p>"தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மையான கோரிக்கை. நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதுகுறித்த குறிப்புகளை நான் எடுத்துச் சென்றிருந்தேன். இது தனித்துறை சார்ந்து விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதால், விரைவில் முதலமைச்சருடன் விரிவாகப் பேசப்படும். </p>
<p> </p>
<p>சமூக நீதி பேசக்கூடிய தமிழ்நாட்டில், அதைச் சரியாக நடைமுறைப்படுத்த சாதிவாரி கணக்கெடுப்பு மிக அவசியம். ஏற்கனவே எங்கள் துறை சார்பாகப் பழங்குடியின மக்களின் சமூக-பொருளாதார கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற கணக்கெடுப்பை ஆதிதிராவிடர் மற்றும் தலித் மக்களுக்கும் நடத்த வேண்டும் என்பதே எங்களின் பார்வை" என்று கூறினார். </p>
<h2>அதிமுக - பாஜக கூட்டணி குறித்து விமர்சனம் </h2>
<p>"தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் நிலைமை பரிதாபகரமாக மாறும் என்று எங்கள் தலைவர் திருமாவளவன் அவர்கள் ஏற்கனவே பலமுறை எச்சரித்திருந்தார். அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மாநிலத்தில் வலிமையாக உள்ள பிராந்தியக் கட்சிகளைச் சிதைப்பதே பாஜகவின் செயல்திட்டம். அதற்கு அதிமுக பலியாகி வருகிறது. </p>
<p>சமூக நீதிக்காகப் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மையார் ஆகியோரால் கட்டிக்காக்கப்பட்ட பேரியக்கம், சேரக்கூடாதவர்களோடு சேர்ந்ததால் இன்று இந்த மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு, தலைவர்கள் தங்களின் சுயநலத்திற்காகவும் பிழைப்புவாதத்திற்காகவும் கட்சி மாறுகிறார்கள். இது பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்குக் கிடைத்த தண்டனை" என்று சாடினார். </p>
<h2>தாட்கோ கடன் ரத்து, நிதி ஒதுக்கீடு உயர்வு </h2>
<p>"வரவிருக்கும் பட்ஜெட்டில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்குக் கடந்த முறையை விடக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியுள்ளோம். குறிப்பாக, அம்பேத்கரின் அயலகக் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான நிதியை உயர்த்தக் கேட்டுள்ளோம். </p>
<p> </p>
<p>மேலும், முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதியின்படியும், நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட 5 ஆண்டுகாலச் செயல்திட்டத்தின்படியும் 'தாட்கோ கடன் ரத்து' செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் இந்த மக்களுக்காகப் புறக்கணிக்கப்பட்ட திட்டங்களுக்கு இந்த முறை இரண்டு மடங்கு, மூன்று மடங்காக நிதியைப் பெற்றுத் தருவோம்" என்றார். </p>
<h2>தாட்கோ கடனில் இடைத்தரகர் புகார் - புதிய செயல்திட்டம் </h2>
<p>"தாட்கோ மூலம் தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் கடன்களில் இடைத்தரகர்களின் தலையீடு இருப்பதாகப் புகார்கள் வருகின்றன. இதற்கும் தாட்கோ நிறுவனத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆதிதிராவிடர் மக்கள் தாட்கோ கடன்களை எளிதாகப் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும், வங்கிகள் இழுத்தடிக்கும் போக்கையும் மாற்றுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம். இனி விண்ணப்பித்த உடனே எவ்விதச் சிரமமும் இன்றி எளிதாகக் கடன் கிடைக்கும் வகையில் புதிய செயல்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்தத் துறை மிகச் சிறப்பாகச் செயல்படும்" என உறுதியளித்தார். </p>
<h2>அண்ணாமலை குறித்த கடும் விமர்சனம் </h2>
<p>தொடர்ந்து பேசிய அவர், </p>
<p>"அண்ணாமலை அவர்கள் பாஜகவின் மாநில தலைவராக இருந்த காலம் தொட்டு, அக்கட்சியின் மறைமுகச் செயல்திட்டங்களை தமிழ்நாட்டில் திணிக்கும் நோக்கில் செயல்பட்டு வந்தார். குறிப்பாக, சிறுபான்மை இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்கள் மீதான மத வன்மப் பேச்சுகளை அவர் தொடர்ந்து பேசி வந்தார். </p>
<p>மைக்கேல்பட்டி மாணவி லாவண்யாவின் துரதிர்ஷ்டவசமான மரணத்தை முன்வைத்து, அங்கிருந்த அருட்சகோதரிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு எதிராக 'கட்டாய மதமாற்றம்' என்ற முற்றிலும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை அவர் பரப்பினார். ஆனால், நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அந்த மரணத்திற்கு மதமாற்றம் காரணமல்ல, அது குடும்பப் பின்னணி சார்ந்த நெருக்கடி என்பது வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டது. இருப்பினும், அண்ணாமலை இதுவரை அதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. அது தொடர்பான வீடியோக்கள் இன்னமும் அவரது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் நீடித்து வருவது அவரது சனாதன அரசியல் போக்கையே காட்டுகிறது" என்றார். </p>
<h2>'புதிய கட்சி' பாஜகவின் முகமூடி - அமைச்சர் குற்றச்சாட்டு</h2>
<p>"பாஜகவில் ஒரு தலைவர் ஓரம் கட்டப்படும் போதோ அல்லது மக்கள் மத்தியில் கட்சியின் பெயருக்கு எதிர்ப்பு இருக்கும் போதோ, அவர்கள் 'புதிய கட்சி' என்ற பெயரில் மாறுவேடம் பூண்டு வருவது அக்கட்சியின் நீண்டகாலச் செயல்திட்டம் என்று அரசியல் வரலாற்றுச் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. </p>
<p>கேசுபாய் படேல் குஜராத்தில் 'குஜராத் பரிவர்த்தன் பார்ட்டி' தொடங்கி பின்னர் பாஜகவில் இணைந்தார். உமாபாரதி 'பாரதிய ஜனசக்தி பார்ட்டி' தொடங்கி மீண்டும் பாஜகவில் இணைந்து மத்திய அமைச்சரானார். எடியூரப்பா 'கர்நாடகா ஜனதா பக்சா' ஆரம்பித்து பின்னர் பாஜகவோடு இணைந்தார். கல்யாண் சிங்கும் இதே பாணியில் செயல்பட்டார். </p>
<p>பாஜக என்ற முகத்தோடு தமிழ்நாட்டிற்குள் வந்தால் சமூக நீதி, சமத்துவம் பேசும் தமிழக மக்கள் தங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்தே இந்த புதிய உத்தி கையாளப்படுகிறது. கடந்த தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவிற்கு தகுந்த பாடம் புகட்டியுள்ளனர். அதன் விளைவாகவே, தற்போது டெல்லி மற்றும் பெங்களூரு பாஜக தலைமைகளின் முழு ஆதரவோடு அண்ணாமலை இந்த புதிய இயக்கத்தைத் தொடங்க முயல்கிறார். இது முற்றிலும் ஒரு புதிய கட்சி அல்ல, மாறாக பாஜகவின் மற்றொரு முகமூடி மட்டுமே. </p>
<p>'வடிவேலு பாணியில் சொல்வதானால், <a title="அண்ணாமலை" href="https://tamil.abplive.com/topic/annamalai" data-type="interlinkingkeywords">அண்ணாமலை</a> அவர்கள் கொண்டையை மறைக்காமல் மாறுவேடம் போட்டு வருகிறார். தமிழக மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்; பல்வேறு வடிவங்களில் அவர்கள் வரலாம், ஆனால் சமூக நீதிக்கு எதிரான அவர்களின் உண்மையான பாஜக முகத்தை மக்கள் எளிதில் கண்டறிந்து விடுவார்கள்'" என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.</p>
Source: Read Full Article