
<h3 dir="ltr"><strong>கணவனை பிரிந்து வாழும் மனைவி</strong></h3>
<p dir="ltr">கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மீதிகுடி செங்கமேட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் 25 வயதுடைய காமாட்சி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவருக்கும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு பெண் குழந்தை உள்ளது.</p>
<p dir="ltr">கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் கணவனை பிரிந்து வாழ நினைத்த காமாட்சி குழந்தையை கார்த்திக்கிடம் விட்டு விட்டு கடந்த ஒரு வருடமாக அவரது தந்தை வீட்டில் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது.</p>
<h3 dir="ltr"><strong>பாலியல் வன்கொடுமை முயற்சி</strong></h3>
<p>கணவனை பிரிந்து தந்தை வீட்டில் வாழும் காமாட்சியை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய மகேந்திரன் என்பவர் தொடர்ந்து அவரது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அதற்கு தொடர்ந்து காமாட்சி மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் வேலைக்காக சென்று கொண்டிருந்த காமாட்சியை அங்கு காரில் வந்த மகேந்திரன் கையை பிடித்து இழுத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்திருக்கிறார்.</p>
<h3><strong>கொலை செய்ய திட்டம்</strong></h3>
<p>ஆத்திரமடைந்த காமாட்சி மகேந்திரனை காரில் வைத்து செருப்பால் அடித்து அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து மகேந்திரன் குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டி இருக்கிறார். இதனால் காமாட்சியின் மீது கோபமடைந்த மகேந்திரன் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது.</p>
<p>அதன்படி காமாட்சி வீட்டிற்கு சென்ற மகேந்திரன் அங்கிருந்த அவரை கத்தியால் சரமாரியாக தாக்கி வெட்டி கொலை செய்திருக்கிறார். அப்போது மகளின் அலறல் சத்தம் கேட்டு தடுக்க வந்த காமாட்சியின் தந்தை பண்டுரங்கனை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பி சென்றிருக்கிறார்.</p>
<p>இது குறித்து தகவல் அறிந்து வந்த <a title="அண்ணாமலை" href="https://tamil.abplive.com/topic/annamalai" data-type="interlinkingkeywords">அண்ணாமலை</a> நகர் போலீசார் கொலை செய்யப்பட்ட காமாட்சி உடலை மீட்டு கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்கு பதிவு செய்து கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
Source: Read Full Article