
<p>விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை நாட்டுப் படகுகளும் (பதிவு செய்யப்பட்டவை மற்றும் பதிவு செய்யப்படாதவை) வருகின்ற 10.06.2026 அன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர்களால் நேரடி தள்ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்காத படகுகளுக்கு டீசல் மானியம் ரத்து செய்யப்படுவதோடு, உரிமமும் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் எச்சரித்துள்ளார்.</p>
<p>தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தைக் கணக்கில் கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் பொருட்டும், ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2026ஆம் ஆண்டிற்கு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை உள்ள 61 நாட்கள் விசைப் படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் மூலமாக கடலில் மீன்பிடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டு மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளது.<br />ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படும் மீன்பிடித் தடைக் காலத்தின் போது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அனைத்து வகை மீன்பிடி கலன்களும் ஆண்டுக்கு ஒருமுறை நேரடி தளஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.</p>
<p>நேரடி ஆய்வின் போது படகின் உறுதித் தன்மை, இயந்திர குதிரைத் திறன், படகின் நீள, அகலம் ஆகியவைகள் பதிவுச் சான்றுடன் சரிபார்க்கப்பட்டு அதனடிப்படையில் விற்பனைவரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் உள்ளிட்ட இதர மானிய திட்டங்கள் வழங்கப்படும். அதன்படி, 2026 ஆம் ஆண்டிற்கு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள மீன்பிடித் தடைக்காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை நாட்டுப் படகுகளும் (பதிவு செய்யப்பட்டவை மற்றும் பதிவு செய்யப்படாதவை) வருகின்ற 10.06.2026 அன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர்களால் நேரடி ஆய்வு செய்யப்பட உள்ளது.</p>
<p>மேலும், ஆய்வு நாளின் போது படகு உரிமையாளர்கள் தங்களது படகுகளின் பதிவுச் சான்றிதழ், மீன்பிடி உரிமச் சான்றிதழ், விற்பனைவரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் அட்டை, துறை மூலம் வழங்கப்பட்ட தொலை தொடர்பு கருவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்குமாறும், ஆய்வுக்குழுவிற்கு தேவையான அனைத்து விவரங்களையும் அளித்திடவும், அரசு நிர்ணயித்துள்ளபடி மீன்பிடிப் படகுகளுக்கு உரிய வர்ணம் பூசி, பதிவு எண் எழுதி ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும்.</p>
<p>விற்பனைவரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் வாங்கும் நாட்டுப் படகுகள் நேரடி ஆய்வின் போது ஆய்விற்குட்படுத்தவில்லை எனில் அப்படகுகளுக்கு விற்பனைவரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன் அப்படகுகள் இயக்கத்தில் இல்லாததாக கருதி அப்படகுகளின் பதிவுச் சான்றினை உரிய விசாரணைக்கு பின் இரத்து செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், ஆய்வு நாள் அன்று படகினை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பின்னொரு நாளில் ஆய்வு செய்யக்கோரும் படகு உரிமையாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட மாட்டாது 6T60T மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். </p>
Source: Read Full Article