கவின் ஆணவக் கொலை: எஸ்.ஐ-யைக் கைது செய்யாதது ஏன்? வழக்கறிஞர் ப.பா. மோகன் கேள்வி!

சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் - சாட்சிகளுக்குப் பாதுகாப்பு கோரிச் சென்னையில் பேட்டி; பிப்ரவரி 11-ல் சிசிடிவி ஆதாரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி இளைஞர் கவின் செல்வகணேஷ் சாதிய ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக உள்ள உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமாரியைப் பாதுகாக்கக் காவல்துறை முயற்சிப்பதாக மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

சென்னைச் சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த வழக்கில் நிலவும் குளறுபடிகள் குறித்துப் பேசியதாவது:

வழக்கின் பின்னணியும் தற்போதைய நிலையும்:

தூத்துக்குடியைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ், நெல்லையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்ததால், கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி பெண்ணின் தம்பி சுர்ஜித்தால் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், பெண்ணின் தம்பி சுர்ஜித், தந்தை (சப் இன்ஸ்பெக்டர்) சரவணன் மற்றும் அடைக்கலம் கொடுத்த ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்த வழக்கில் மூன்றாவது எதிரியாக (A3) சேர்க்கப்பட்டுள்ள பெண்ணின் தாயார் உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமாரி இதுவரை கைது செய்யப்படவில்லை.

நீதிமன்ற விசாரணை: 

சரவணன் மற்றும் ஜெயபால் தங்கள் மீதானக் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி, கொலை நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

வழக்கறிஞர் ப.பா. மோகன் முன்வைக்கும் கோரிக்கைகள்:

சிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெறவில்லை என்று சாடிய வழக்கறிஞர் மோகன், பின்வரும் கோரிக்கைகளைத் தமிழக அரசுக்கு முன்வைத்துள்ளார். பெண் காவல் அதிகாரி கிருஷ்ணகுமாரியைச் சிபிசிஐடி இன்னும் கைது செய்யாதது, சக அதிகாரியைக் காப்பற்ற நினைப்பதையேக் காட்டுகிறது. எனவே, இந்த வழக்கை விசாரிக்கத் தனிப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும்.

சிறப்பு அரசு வழக்கறிஞர்: 

உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் திறம்பட நடத்த மூத்த வழக்கறிஞர் ஒருவரைச் சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும். இந்த வழக்கில் தொடர்புடையச் சாட்சிகளுக்கு அரசு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும். சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகச் செயல்படும் அரசு என்றுச் சொல்லிக்கொள்ளும் இந்த ஆட்சியில், இத்தகையக் கொடூரங்கள் தொடர்வதால், இதற்கு எதிராகத் தனிச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.

ஆணவக் கொலைகளுக்கு எதிரான நீதிப் போராட்டத்தில் தமிழக அரசு மெத்தனம் காட்டக்கூடாது என்றும், பாதிக்கப்பட்டக் கவின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் தனதுப் பேட்டியின் போது வலியுறுத்தினார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk