டிசம்பர் 18-ல் விஜயமங்கலத்தில் விஜய் பிரம்மாண்டப் பிரச்சாரம்; வரலாறு படைக்கும் கூட்டத்துக்குப் புதுமையான கோரிக்கை!
ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் வர வேண்டாம் என்று தவெக ஒருங்கிணைப்பு தலைவர் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் செங்கோட்டையன் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொள்ளும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம், வரும் டிசம்பர் 18-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரலைப் பகுதியில் நடைபெறவுள்ளது. பெரியார் பிறந்த மண்ணான ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்காகப் புதுச்சேரியில் நடைபெற்ற பிரச்சாரக் குழுவின் வரவேற்புக்குப் பிறகு, இந்தக் கூட்டத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை தமிழகமே கண்டிராத வகையில் சிறப்பான முறையில் தலைவர் விஜய்க்கு வரவேற்பு அளிக்கும் வகையில், 40 டிஜிட்டல் பேனர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர்களும் பொதுமக்களும் மட்டுமே கலந்துகொள்வார்கள். கூட்டத்தில் கலந்துகொள்ள பாஸ் அல்லது டோக்கன் எதுவும் வழங்குவதாக இல்லை என்று கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. தலைவர் விஜய் அவர்கள், கூட்டம் நடைபெறும் நாளில் காலை விமானம் மூலமாகச் சென்னையிலிருந்து கோவை வந்து, அங்கிருந்து தரை மார்க்கமாக விஜயமங்கலம் சரலைப் பகுதிக்கு வரவுள்ளார்.
இந்தக் கூட்டம் காலை 11 மணி முதல் 1 மணிக்குள் நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் பொதுமக்களை அலைகடலெனத் திரண்டு வருமாறு அழைப்பு விடுக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளது. இந்தக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், சிலருக்கு இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்கும் மக்களுக்குக் காவல்துறை மூலம் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி, கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் எனத் தமிழக வெற்றிக் கழகம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது. கூட்டத்தில் மக்கள் பாதுகாப்பு மற்றும் வசதிக்காகப் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர் அணியினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் பணியாற்றுவார்கள்.
போதுமான குடிநீர், பாதுகாப்பு அரண்கள், கழிப்பிட வசதி, ஆம்புலன்ஸ் வசதி மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போன்றவை அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்படும் என்று கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. வரலாறு படைக்கப் போகும் இந்தக் கூட்டத்தில், அனைத்து விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றி, கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
.jpg)