கரிகால சோழன் கட்டிய ஆலயத்தில் நவீன வசதி; 'பிறவாப் புளி', 'குளம்படித் தழும்பு' எனப் பல்வேறு சிறப்பம்சங்கள்!
கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலின் வரலாற்றையும், சிறப்புகளையும் பக்தர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், கோயிலில் இன்று முதல் கணினி தொடுதிரை (Touch Screen Kiosk) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் கோயிலின் முழு விவரங்களையும் தெரிந்து கொள்கின்றனர்.
இத்திருக்கோயில் இரண்டாம் நூற்றாண்டில் கரிகால சோழனால் கட்டப்பட்டது. இங்குள்ள கனக சபை 17 ஆம் நூற்றாண்டில் அழகாத்ரி நாயக்கரால் கட்டப்பட்டது. இது சிவபெருமானின் பல்வேறு திருவிளையாடல்களை நிகழ்த்திய ஸ்தலமாகும். மற்ற சிவாலயங்களைப் போலன்றி, இங்குள்ள பட்டீஸ்வரர் சிவலிங்கத்தின் தலையில் காமதேனு கன்றின் குளம்படித் தழும்பு இன்றும் காணப்படுகிறது.
கோயிலின் முன் உள்ள புளிய மரத்தின் விதைகளை எங்கு எடுத்துச் சென்று விதைத்தாலும் அது முளைக்காது என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் பனை மரமும் தல விருட்சமாக உள்ளது. இப்பகுதியில் உள்ள மாட்டுச் சாணத்தில் கூடப் புழுக்கள் வராது என்ற சிறப்பும் உள்ளது.
எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் ஆடும் நிலையில் காட்சி அளிப்பார். ஆனால், இக்கோயிலில் நடராஜர் 'ஆடி முடியப்போகும் நிலையில்' காட்சியளிக்கிறார். இங்குள்ள கனக சபையில் மகாவிஷ்ணு, பிரம்மா, காளி தேவி, சுந்தரர் ஆகியோருக்கு நடராஜன் தனது தாண்டவ நடன தரிசனத்தைக் காட்சி தரும் வகையில் அமைந்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலுக்கு அடுத்தபடியாக இங்குத் திருவாதிரை ஆருத்ரா தரிசனத் திருவிழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுவதால், இந்த ஆலயம் 'மேலை சிதம்பரம்' என்றும் அழைக்கப்படுகிறது. இங்குத் தங்கத்தால் ஆன நடராஜர் சிலை உள்ளது.
கோயிலின் வரலாறு மற்றும் அருகில் உள்ள மற்ற கோயில்கள் பற்றிய தகவல்களைப் பக்தர்கள் முழுமையாக அறிந்து கொள்வதற்காகக் கணினி தொடுதிரை வசதி இன்று முதல் துவங்கப்பட்டது. இதனை கோவை திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி இனிப்பு வழங்கித் துவக்கி வைத்தார்
