அரசாணையின்படி அதிகாரிகளுக்கு அனுமதி; விரைந்து நடவடிக்கை எடுக்க வசதி!
கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், புலனாய்வு அதிகாரிகள் மற்றும் காவலர்கள், வழக்கு விசாரணை, குற்றவாளிகளைக் கைது செய்தல், திருட்டுப் பொருட்களை மீட்பது, மற்றும் கணினி சார்ந்த குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்காக விமானம் மூலம் பிற மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்ள, தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல் படைத் தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையை அடிப்படையாகக் கொண்டு, தற்போது தமிழக டிஜிபி அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த உத்தரவின்படி, பிற மாநிலங்களில் நடக்கும் வழக்கு விசாரணைகளுக்காக விமானப் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை, தமிழகத்தில் குற்றம் செய்துவிட்டு வெளிமாநிலங்களுக்குத் தப்பிச் செல்லும் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய உதவும். மேலும், சைபர் குற்றங்களில் பொதுமக்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து கொள்ளையடிக்கப்படும் பணத்தை, 24 முதல் 48 மணி நேரத்திற்குள் முடக்கி மீட்கவும் இது வழிவகுக்கும்.
in
தமிழகம்