சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்; நடத்துநர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை!
திருச்செந்தூரில், புர்கா அணிந்த பெண் ஒருவரைப் பேருந்தில் ஏற்ற மறுத்த தனியார் பேருந்து ஒன்று வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூரிலிருந்து காயல்பட்டினம் செல்வதற்காக VSS என்ற தனியார் பேருந்தில் பெண் பயணி ஒருவர் ஏற முயன்றார். அப்போது, பேருந்தின் நடத்துநர் அவரைத் தடுத்து வாக்குவாதம் செய்தார். “காயல்பட்டினம் வழியாகத்தானே பேருந்து செல்கிறது, பின்னர் ஏன் ஏறக் கூடாது?” என்று பெண் கேட்டபோது, “இது எங்கள் பேருந்து, எங்கள் உரிமையாளர் ஏற்ற வேண்டாமெனச் சொல்லிவிட்டார்” என்று நடத்துநர் பதிலளித்துள்ளார். இந்த வாக்குவாதம் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இந்த வீடியோவின் அடிப்படையில், போக்குவரத்து விதிகளை மீறியதாக அந்தத் தனியார் பேருந்தை, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட நடத்துநரிடம் விசாரணை நடத்தி, அவரது உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்துப் பேருந்து உரிமையாளர் விளக்கம் அளித்துள்ளார். தொலைதூரப் பயணிகளுக்கு இருக்கை முன்னுரிமை அளிக்கவே, அருகில் உள்ள ஊர்களுக்குச் செல்வோர் பேருந்தில் ஏற வேண்டாம் என நடத்துநர் கூறியதாகவும், அந்தப் பெண் புர்கா அணிந்ததால் ஏற்ற மறுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், அனைத்துப் பயணிகளையும் எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் ஏற்றிச் செல்லுமாறு அனைத்துத் தனியார் பேருந்துகளுக்கும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
